search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பலியான தம்பதி
    X
    பலியான தம்பதி

    காதல் திருமணம் செய்த தம்பதி குழந்தையுடன் பலி - உருக்கமான தகவல்

    குலசேகரம் அருகே கால்வாயில் கார் விழுந்த விபத்தில் காதல் திருமணம் செய்த தம்பதி குழந்தையுடன் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    திருவட்டார்:

    குலசேகரம் அருகே உள்ள அஞ்சுகண்டரை முக்கம்பால விளை பகுதியை சேர்ந்தவர் அனீஷ் (வயது 30).

    இவர் தேனீ வளர்க்கும் பெட்டி தயாரிக்கும் பணி செய்து வந்தார். இந்த பணிக்காக அவர் அடிக்கடி கேரளாவுக்கும் சென்றுவருவது வழக்கம். இவரது மனைவி மஞ்சு (26). இந்த தம்பதியின் 1½ வயது ஆண் குழந்தை அமர்நாத்.

    அனீசும், மஞ்சுவும் காதல் திருமணம் செய்தவர்கள். களியல் பகுதியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் மஞ்சு நர்சாக வேலை பார்த்து வந்தார். அப்போது உடல்நலக்குறைவு காரணமாக அனீஷ் அந்த ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறச் சென்றார். அப்போது அவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டு காதல் மலர்ந்து திருமணத்தில் முடிந்துள்ளது.

    நேற்று அனீஷ் தனது காரில் மனைவி மற்றும் குழந்தையுடன் குலசேகரத்திற்கு சென்றார். அங்கு உள்ள ஜவுளிக்கடையில் புதிய துணிகளை அவர்கள் வாங்கினார்கள். மேலும் வீட்டிற்கு தேவையான பொருட்களையும் அவர்கள் வாங்கிக்கொண்டு மீண்டும் காரில் ஊர் திரும்பினார்கள். அந்த காரை அனீஷ் ஓட்டினார்.

    குலசேகரம்- திருநந்திக்கரை சாலையில் இருந்து அஞ்சுகண்டரை செல்வதற்காக கோதையாறு இடதுகரை கால்வாய் சாலையில் கார் சென்றுகொண்டிருந்தது. அப்போது திடீரென்று அனீசின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய அந்த கார் சாலையோரத்தில் இருந்த கால்வாயில் பாய்ந்தது.

    குமரி மாவட்டத்தில் பெய்த மழை காரணமாக அந்த கால்வாயில் அதிக அளவு தண்ணீர் சென்று கொண்டிருந்தது. இதனால் கார் தண்ணீரில் மூழ்கியதால் காரில் இருந்தவர்களால் வெளியே வரமுடியவில்லை. மேலும் விபத்து நடந்த பகுதி மக்கள் நடமாட்டம் அதிகம் இல்லாத இடம் என்பதால் கார் கால்வாயில் பாய்ந்தது உடனடியாக யாருக்கும் தெரியவில்லை. அந்த வழியாக சென்ற சிலர் கார் கால்வாயில் மூழ்கி இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுபற்றி அக்கம், பக்கத்தினரிடம் தெரிவித்து காரை கயிறு கட்டி கரைக்கு இழுத்தனர். பிறகு கார் கண்ணாடியை உடைத்து காரில் இருந்த 3 பேரையும் மீட்டு அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களை பரிசோதித்த டாக்டர்கள், அனீஷ் உள்பட 3 பேரும் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    கார் கால்வாயில் பாய்ந்து 3 பேர் இறந்த தகவல் கிடைத்ததும் அவர்களின் உறவினர்கள் அங்கு திரண்டனர். அனீஷ், மஞ்சு மற்றும் குழந்தை அமர்நாத் உடல்களை பார்த்து அவர்கள் கண்ணீர்விட்டு கதறியது பார்ப்பவர்களை உருக்குவதாக இருந்தது.

    இந்த விபத்து பற்றிய தகவல் கிடைத்ததும் தக்கலை போலீஸ் டி.எஸ்.பி. ராமச்சந்திரன் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினார்கள். மேலும் அனீஷ் உள்பட 3 பேர் பிணத்தையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு இன்று பிரேத பரிசோதனை நடைபெறுகிறது. இதையொட்டி அவர்களின் உறவினர்கள் சோகத்துடன் திரண்டுள்ளனர்.
    Next Story
    ×