search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விஷம் குடித்து தற்கொலை செய்த மினி.
    X
    விஷம் குடித்து தற்கொலை செய்த மினி.

    நாகர்கோவிலில் 2 குழந்தைகளுடன், வி‌ஷம் குடித்த இளம்பெண் பலி

    நாகர்கோவிலில் குடும்ப தகராறில் 2 குழந்தைகளுடன், வி‌ஷம் குடித்த இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் அருகு விளை சுடலைமாட சுவாமி கோவில் தெருவைச் சேர்ந்தவர் பிரவின்ராஜ். தொழிலாளி. பிரவின்ராஜின் மனைவி மினி (வயது27). இவர்களுக்கு 5 வயதில் மகனும், 4 வயதில் மகளும் உள்ளனர். தொழிலாளியான பிரவின்ராஜ் கடந்த சில மாதங்களாக மனைவி மினியிடம், குடும்ப செலவுக்கு பணம் கொடுப்பதில்லை.

    வேலைக்குச் சென்று கிடைக்கும் பணத்தை மது வாங்கி குடித்து செலவழித்தார். இதனை மினி கண்டித்தார். அதன் காரணமாக கணவன்-மனைவியிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. குடும்ப செலவுக்கு பணம் இன்றி தவித்த மினி கடந்த 20-ந்தேதி கணவர் வெளியேச் சென்றதும், குழந்தைகளுடன் வி‌ஷம் குடித்தார். நீண்ட நேரமாக மினியும், அவரது குழந்தைகளும் வீட்டை விட்டு வெளியே வராததால் சந்தேகம் அடைந்த அக்கம், பக்கத்தினர் வீட்டிற்குள் சென்று பார்த்தனர்.

    அங்கு மினியும், அவரது 2 குழந்தைகளும் வாயில் நுரை தள்ளியபடி மயங்கி கிடப்பதை கண்டனர். உடனே அவர்களை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் மினிக்கும், அவரது குழந்தைகளுக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் சிகிச்சை பலனின்றி இளம்பெண் மினி இன்று காலை பரிதாபமாக இறந்தார்.

    அவரது 2 குழந்தைகளும், உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த சம்பவம் பற்றி ஆஸ்பத்திரியில் இருந்து, வடசேரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வடசேரி போலீசார் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்தனர். பின்னர் மினியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் மினி தற்கொலை செய்தது பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு உள்ளனர். குழந்தைகளுடன் வி‌ஷம் குடித்த மினி இறந்து போன சம்பவம் அருகுவிளை பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×