search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டெங்கு காய்ச்சல் (கோப்புப்படம்)
    X
    டெங்கு காய்ச்சல் (கோப்புப்படம்)

    திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 7 பேருக்கு டெங்கு காய்ச்சல்

    திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 7 பேர் டெங்கு அறிகுறியுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 58 பேர் காய்ச்சல் நோயுடன் அனுமதிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
    திருவாரூர்:

    திருவாரூர் மற்றும் மன்னார்குடி பகுதிகளை சேர்ந்த ராமகிருஷ்ணன், அரவிந்த், விஜய், தமிழ்மணி, ரமேஷ்குமார், சையது, அனுபல்லவி ஆகிய 7 பேரும் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பரிசோதனையில் அவர்களுக்கு டெங்கு அறிகுறி இருப்பது உறுதி செய்யப்பட்டது.

    அதுபோல் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தற்போது மேலும் 58 பேர் காய்ச்சலால் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 6 குழந்தைகளும் காய்ச்சல் ஏற்பட்டதால் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களும் தீவிர மருத்துவ கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

    காய்ச்சல் மேலும் பரவாமல் தடுக்க திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தனி வார்டு அமைக்கப்பட்டு ஒவ்வொரு நோயாளிக்கும் கொசு வலைகள் வழங்கி பாதுகாப்பு ஏற்பாடுகளை நிர்வாகம் செய்துள்ளது.

    மேலும் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்படுபவர்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டு வருவதாகவும், 24 மணி நேரமும் மருத்துவர்கள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களை கண்காணித்து வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
    Next Story
    ×