search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    பச்சிளம் பெண் குழந்தையை ரூ. 1 லட்சத்திற்கு விற்ற தந்தை கைது

    நெல்லை அருகே பச்சிளம் பெண் குழந்தையை ரூ.1 லட்சத்திற்கு விற்ற தந்தையை கைது செய்த போலீசார், இதற்கு உடந்தையாக இருந்தவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நெல்லை:

    நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் அருகே உள்ள ஆறுமுகம்பட்டி ஈஸ்வரி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜேசு இருதயராஜ் (வயது 43). இவருடைய மனைவி புஷ்பலதா (35). இவர்களுக்கு ஏற்கனவே 1 மகள், 2 மகன்கள் உள்ளனர்.

    இந்நிலையில் புஷ்பலதா மீண்டும் கர்ப்பம் ஆனார். அவர் பிரசவத்துக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு கடந்த 3-ந்தேதி ஒரு ஆண் குழந்தை, ஒரு பெண் குழந்தை என இரட்டை குழந்தைகள் பிறந்தன. பின்னர் சிகிச்சை முடிந்து புஷ்பலதா வீட்டுக்கு வந்தார்.

    நேற்று முன்தினம் ஜேசு இருதயராஜ் தனது மனைவியிடம் தற்போது பிறந்த பெண் குழந்தையை விற்பனை செய்யப்போவதாக கூறினார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.

    அப்போது புஷ்பலதாவிடம் இருந்து பச்சிளம் பெண் குழந்தையை பறித்த ஜேசு இருதயராஜ், அந்த குழந்தையுடன் வீட்டில் இருந்து வெளியே சென்று விட்டார். பின்னர் அவர் குழந்தை இல்லாமல் வீட்டுக்கு வந்தார். இதனால் அவரை உறவினர்கள் கண்டித்தனர்.

    இது குறித்து தகவல் அறிந்த சிவந்திபுரம் கிராம நிர்வாக அதிகாரி குரு, விக்கிரமசிங்கபுரம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஜேசுஇருதயராஜை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் தனது பெண் குழந்தையை ஆலங்குளம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த தம்பதியிடம் ரூ.1 லட்சத்துக்கு விற்பனை செய்தது தெரியவந்தது.

    மேலும் குழந்தையை விற்பனை செய்வதற்கு ஆலங்குளத்தை சேர்ந்த தங்க ராஜ், செல்வம், கண்ணன், சிவந்திபுரத்தை சேர்ந்த நெல்லையப்பன் ஆகிய 4 பேர் உடந்தையாக இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் ஜேசு இருதயராஜை கைது செய்தனர்.

    மேலும் தங்கராஜ் உள்பட 4 பேரையும் பிடித்து, அவர்கள் இதுபோல் வேறு ஏதேனும் குழந்தைகளை விற்பனை செய்வதற்கு உடந்தையாக இருந்தார்களா? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே ஆலங்குளம் தம்பதியிடம் இருந்து குழந்தையை போலீசார் மீட்டு நெல்லையில் உள்ள காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

    Next Story
    ×