search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொலை நடந்த வீட்டில் போலீசார் விசாரணை நடத்திய போது எடுத்த படம்
    X
    கொலை நடந்த வீட்டில் போலீசார் விசாரணை நடத்திய போது எடுத்த படம்

    சங்கரன்கோவிலில் மூதாட்டியை கொன்று உடலை எரித்து நகை கொள்ளை

    சங்கரன்கோவில் அருகே மூதாட்டியை கொலை செய்து 16 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்ற கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
    சங்கரன்கோவில்:

    நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் முல்லை நகரை சேர்ந்தவர் முத்தையா (வயது 75). இவர், சங்கரன்கோவிலில் டிரைவிங் ஸ்கூல் நடத்தி வருகிறார். இவரது மனைவி ராஜேஸ்வரி (65). இவர்களுக்கு 3 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி விட்டது. மகன் ஜெயக்குமார் தனது மனைவி, குழந்தைகளுடன் சங்கரன்கோவில் வடக்கு ரதவீதியில் வசித்து வருகிறார்.

    முல்லைநகர் வீட்டில் சந்திரனும், ராஜேஸ்வரியும் வசித்து வந்தனர். நேற்று காலையில் முத்தையா திருமண நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக வெளியே சென்று விட்டார். இதனால் வீட்டில் ராஜேஸ்வரி மட்டும் தனியாக இருந்தார். இந்த நிலையில் வெளியே செல்வதற்காக பக்கத்து வீட்டுக்காரர் தனது வீட்டை பூட்டினார். அவரது வீட்டின் சாவியை வழக்கம் போல் அருகே உள்ள ராஜேஸ்வரியிடம் கொடுப்பதற்காக சென்றார். அப்போது வீட்டின் முன்பு இருந்த இரும்புக்கதவு பூட்டப்பட்டு இருந்தது. நீண்ட நேரமாக கதவை தட்டியும் திறக்காததால் சந்தேகம் அடைந்து, ஜெயக்குமாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    அவர் விரைந்து வந்து, அக்கம்பக்கத்தினர் உதவியுடன் இரும்புக்கதவை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது வீட்டுக்குள் அடித்துக் கொலை செய்யப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் ராஜேஸ்வரி பிணமாக கிடந்துள்ளார். மேலும் அவரது உடல் தீவைத்து எரிக்கப்பட்டு இருந்தது. அவர் அணிந்திருந்த 16 பவுன் நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டு இருந்தன.

    இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த ஜெயக்குமார் கதறி அழுதார். இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் சங்கரன்கோவில் துணை போலீஸ் சூப்பிரண்டு பாலசுந்தரம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    நெல்லையில் இருந்து மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. அது வீட்டில் இருந்து மோப்பம் பிடித்து மெயின் ரோட்டில் உள்ள ஒரு திருமண மண்டபம் வரை ஓடிவிட்டு, மீண்டும் கொலை நடந்த வீட்டுக்கு திரும்பி வந்து விட்டது. அது யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. இந்த படுகொலை குறித்து சங்கரன்கோவில் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    முதல்கட்ட விசாரணையில் ‘வீட்டில் ராஜேஸ்வரி தனியாக இருந்ததை அறிந்த கும்பல் ஒன்று வீட்டுச்சுவர் ஏறி குதித்து புகுந்துள்ளனர். பின்னர் வீட்டுக்குள் சென்று ராஜேஸ்வரியின் தலையில் கம்பு அல்லது இரும்பு கம்பி போன்ற ஏதோ ஒரு பொருளால் அடித்துக் கொலை செய்துள்ளனர். அவர் அணிந்து இருந்த 16 பவுன் நகைகளை கொள்ளை அடித்து அந்த கும்பல், உடலை தீவைத்து எரித்துள்ளனர்.

    அரைகுறையாக எரிந்த நிலையில் உடலை அங்கேயே போட்டுவிட்டு கொள்ளை கும்பல் தப்பி சென்றது தெரியவந்துள்ளது. இந்த கொடூர கொலை மற்றும் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட கும்பல் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் கொலையாளிகளை பிடிப்பதற்காக சங்கரன்கோவில் டவுண் இன்ஸ்பெக்டர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிரா காட்சிகளை கொண்டும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    ஏற்கனவே சங்கரன் கோவில் நகரில் வியாபாரியின் கையை வெட்டி பணம் 15ஆயிரம் கொள்ளை, நகை கடையில் பணம் கொள்ளை, வீட்டின் வாசல்களில் கோலம் போட்டு கொண்டிருந்த பெண்களிடம் நகையை பறித்து கொண்டு சென்ற சம்பவங்களில் இதுவரை குற்றவாளிகள் பிடிபடாத நிலையில் நேற்று கொலை மற்றும் கொள்ளை நடைபெற்ற சம்பவம் சங்கரன்கோவில் பகுதியில் தனியாக வசிக்கும் முதியவர்களிடம் பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது. எனவே உடனடியாக கொள்ளையில் ஈடுபடும் நபர்களை பிடிக்க வேண்டும் என்றும் போலீசார் இந்த பகுதிகளில் கூடுதலாக ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் எனவும் பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×