search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்தில் பலியான மாணவர்கள் ராஜசேகர், சித்திக் ராஜா, கவுதம்
    X
    விபத்தில் பலியான மாணவர்கள் ராஜசேகர், சித்திக் ராஜா, கவுதம்

    கோவையில் ரெயில் மோதி 4 மாணவர்கள் பலி

    கோவையில் ஒரே கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் 4 பேர் ரெயில் மோதி பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    கோவை:

    கொடைக்கானலை சேர்ந்தவர் தீன் முகமது. இவரது மகன் சித்திக் ராஜா (22). இவர் கோவை சூலூர் அருகே உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வந்தார்.

    இவரது நண்பர்கள் நிலக்கோட்டையைச் சேர்ந்த ராஜசேகர் (20). தேனி விக்னேஷ் (22) இவர்களில் ராஜசேகர் என்ஜினீயரிங் 3-ம் ஆண்டு படித்து வந்தார். விக்னேஷ் இறுதி ஆண்டு படித்து வருகிறார். இவர்கள் அப்பகுதியில் அறை எடுத்து தங்கி இருந்தனர்.

    இதே கல்லூரியில் என்ஜினீயரிங் படித்த ராஜபாளையம் கருப்பசாமி, (24), கவுதம் (23) ஆகியோர் நடந்து முடிந்த தேர்வில் தோல்வி அடைந்தனர். அந்த பாடத்தை எழுதுவதற்காக நேற்று கோவை வந்தனர்.

    தேர்வு முடிந்ததும் மாணவர்கள் 5 பேரும் ராவத்தூர்-முத்துகவுண்டன்புதூர் செல்லும் வழியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்று மது அருந்தி உள்ளனர். பின்னர் அறைக்கு சென்றனர். அதன் பின்னரும் அவர்களுக்கு மது அருந்த வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது.

    அப்போது இரவு 10 மணியை நெருங்கி விட்டது. இதனால் 5 பேரும் அங்குள்ள டாஸ்மாக் கடைக்கு சென்று மதுபாட்டில்களை வாங்கினர்.

    சூலூர் அருகே உள்ள ராவத்தூர்-முத்துகவுண்டன்புதூர் செல்லும் வழியில் பகுதிக்கு சென்ற அவர்கள் அங்குள்ள தண்டவாளத்தில் அமர்ந்து மது குடித்து கொண்டு இருந்தனர். இதில் போதை தலைக்கேறியது. இரவு 10.30 மணியளவில் கேரள மாநிலம் ஆலப்புழாவில் இருந்து சென்னை செல்லும் ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரெயில் வந்தது. மதுபோதையில் இருந்ததால் ரெயில் வருவதை மாணவர்கள் கவனிக்கவில்லை.

    விபத்து

    கண் இமைக்கும் நேரத்தில் அவர்கள் மீது ரெயில் மோதியது. இதில் மாணவர்கள் சித்திக் ராஜா, ராஜசேகர், கருப்பசாமி, கவுதம் ஆகியோர் ரெயில் சக்கரத்தில் சிக்கி கொண்டனர். 4 பேரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். அவர்களது உடல் துண்டு துண்டானது.

    மாணவர் விக்னேஷ் ரெயில் வருவதை பார்த்ததும் அங்கிருந்து ஓடியதால் உயிர் தப்பினார். தனது கண் முன் சக மாணவர்கள் ரெயில் மோதி இறந்ததை கண்டதும் விக்னேஷ் கதறி அழுதார்.

    தகவல் அறிந்து ரெயில்வே போலீசார் அங்கு வந்தனர். அவர்கள் ரெயில் மோதி பலியான 4 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மாணவர்கள் பலியான தகவல் அவர்களது குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட்டது. அவர்கள் கோவை விரைந்து வந்தனர். 4 பேரின் உடல்களை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.

    ஒரே கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் 4 பேர் ரெயில் மோதி பலியான சம்பவம் பற்றி அறிந்ததும் அவர்களுடன் படிக்கும் சக மாணவர்கள் இன்று கோவை அரசு ஆஸ்பத்திரியில் திரண்டு இருந்தனர். அவர்கள் தங்களுடன் படித்த சக மாணவர்கள் இறந்து விட்டதால் சோகத்துடன் இருந்தனர். பலியான 4 பேரின் உடல்களும் இன்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு அவர்களது சொந்த ஊர்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது.

    Next Story
    ×