search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மீனவர்கள்
    X
    மீனவர்கள்

    புயல் எச்சரிக்கையால் 3-வது நாளாக ராமேசுவரம் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை

    புயல் எச்சரிக்கையால் 3-வது நாளாக ராமேசுவரம் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. பாம்பன் துறைமுகத்தில் 2ம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டது.
    ராமேசுவரம்:

    அந்தமானையொட்டி உள்ள வங்கக்கடல் பகுதியில் கடந்த 6-ந் தேதி காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி பின்னர் புயலாக மாறியது. இந்த புயலுக்கு ‘புல்புல்’ என பெயரிடப்பட்டு உள்ளது.

    இந்த புயலால் தமிழகத்துக்கு பாதிப்பு இருக்காது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. எனினும் தென் தமிழகத்தில் உள்ள கடலோர மாவட்ட மீனவர்கள் வங்கக்கடல் பகுதியில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டு இருந்தது.

    அதன்படி ராமேசுவரம், பாம்பன் மீனவர்கள் கடலுக்கு செல்ல நேற்று முன்தினம் முதல் (6-ந் தேதி) தடை விதிக்கப்பட்டது. ராமேசுவரம், தனுஷ்கோடி, பாம்பன் பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டதால் நேற்றும் தடை விதிக்கப்பட்டது.

    இதனிடையே புயல் எச்சரிக்கையை குறிக்கும் வகையில் நேற்று பாம்பன் துறைமுகத்தில் 2ம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டது. புல் புல் புயல் மேற்கு வங்கம் அல்லது வங்கதேச கரையை நோக்கி நகரும் என தெரிகிறது.

    ராமேசுவரத்தில் இன்று காலை வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. கடல் கொந்தளிப்பு குறைந்து இருந்தது. எனினும் வானிலை மையம் அறிவுறுத்தலின் பேரில் கடலுக்கு செல்வதற்கான அனுமதி டோக்கனை மீன் வளத்துறை வழங்கவில்லை.

    இதன் காரணமாக 3-வது நாளாக இன்றும் ராமேசுவரம் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.

    Next Story
    ×