search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    கள்ளக்காதலை கண்டித்ததால் அரசு ஊழியரை அடித்து கொன்ற மனைவி உள்பட 5 பேர் கைது

    திண்டுக்கல் அருகே கள்ளக்காதலை கைவிட கூறியதால் அரசு ஊழியரை அடித்துக் கொன்ற மனைவி உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டம் நத்தம் மீனாட்சிபுரத்தைச் சேர்ந்தவர் சிவபாலாஜி. (வயது 38). இவர் நத்தம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உதவி அதிகாரியாக பணிபுரிந்து வந்தார். இவருக்கும் சண்முகப்பிரியா (28) என்பவருக்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

    இவர்களுக்கு 5 வயதில் 1 மகன் உள்ளார். சண்முக பிரியாவுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த கார் டிரைவர் பாண்டி (31) என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்தது. இது சிவபாலாஜிக்கு தெரிய வரவே அவர் 2 பேரையும் கண்டித்துள்ளார்.

    ஆனால் இவர்களது கள்ளத் தொடர்பு தொடர்ந்து நீடித்து வந்தது. இதனால் சிவபாலாஜியை தீர்த்து கட்ட பாண்டியும், சண்முகப்பரியாவும் முடிவு செய்தனர். இதற்காக பாண்டி தனது நண்பர்களான மதுரையைச் சேர்ந்த விக்னேஷ் (28), நத்தத்தைச் சேர்ந்த எலக்ட்ரீஷியன் யோகராஜ் (28), ஒப்பந்தகாரர் ராஜாராம் (34) ஆகியோரை அழைத்துக் கொண்டார்.

    சண்முகப்பிரியாவும், பாண்டியும் சிவபாலாஜியிடம் முக்கியமான வி‌ஷயம் பேச வேண்டும் என சாயஓடை என்ற பகுதிக்கு அழைத்து வந்தனர். அப்போது பாண்டி தனது கள்ளத் தொடர்பை துண்டிக்க முடியாது என கூயுள்ளார். இதனால் கோபமடைந்த சிவபாலாஜி அங்கிருந்து எழுந்து சென்றார்.

    உடனே பின்னால் டாடா சுமோ காரை கொண்டு சிவபாலாஜியை, பாண்டி இடித்து கீழே தள்ளினார். இதில் நிலை குலைந்து கீழே விழுந்த சிவபாலாஜி மீது மற்ற 4 பேரும் கல்லை தூக்கி போட்டு கொலை செய்தனர். பின்னர் அக்கும்பல் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். சிவபாலாஜி வாகனம் மோதி இறந்தது போல சித்தரிக்க அவர்கள் முயற்சித்துள்ளனர். இது குறித்து சிவபாலாஜியின் தாயார் பூங்கோதைக்கு தகவல் கிடைத்தது. அவர் சம்பவ இடத்துக்கு வந்து பார்த்த போது தனது மகன் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று சந்தேகமடைந்தார்.

    சிவபாலாஜியின் செல்போன் எண் மற்றும் அவரது மனைவியின் செல்போன் ஆகியவற்றை வாங்கி சோதனை செய்த போது கொலை செய்தது உறுதியானது. இதனையடுத்து நத்தம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜமுரளி தலைமையலான போலீசார் அரசு ஊழியரை அடித்துக் கொன்ற மனைவி சண்முகப்பிரியா, கள்ளக்காதலன் பாண்டி உள்பட 5 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×