search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைதான கண்ணம்மாள் - பூங்கொடி
    X
    கைதான கண்ணம்மாள் - பூங்கொடி

    மாமியாரை கொன்று கோவிலில் நேர்த்தி கடன் செலுத்திய மருமகள்

    மாமியாரை கொலை செய்த அடுத்த நாள் கண்ணம்மாள், பூங்கொடி ஆகியோர் பூங்கொடியின் குழந்தைகளை அழைத்துக்கொண்டு சமயபுரத்தில் குழந்தைகளுக்கு மொட்டையடித்து நேர்த்தி கடன் செலுத்தி உள்ளனர்.
    வெள்ளகோவில்:

    திண்டுக்கல் மாவட்டம் ஈசநத்தம் அருகே உள்ள தாச நாயக்கனூரை சேர்ந்தவர் செல்வராஜ் (50). பைனான்ஸ் அதிபர். இவரது மனைவி வசந்தாமணி (42). இவர்கள் மதுரை ஆரப்பாளையத்தில் வசித்து வந்தனர்.

    கணவன்-மனைவி இருவரும் தங்களது மகன் பாஸ்கரனின் திருமண அழைப்பிதழ் கொடுக்க திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகே உள்ள உத்தாண்ட குமார வலசை சேர்ந்த செல்வராஜ் அக்காள் கண்ணம்மாள் (54) வீட்டிற்கு வந்தனர். அப்போது செல்வராஜையும், அவரது மனைவி வசந்தாமணியையும் சொத்து தகராறு காரணமாக கண்ணம்மாள், அவரது மருமகன் நாகேந்திரன் உள்ளிட்ட சிலர் கொலை செய்து வீட்டின் அருகே குழி தோண்டு புதைத்தனர்.

    இதுகுறித்து வெள்ளகோவில் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து கண்ணம்மாள், அவரது மருமகன் நாகேந்திரன், அவரது நண்பர் இளங்கோ ஆகியோரை கைது செய்தனர்.

    அவர்கள் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். மேலும் கொலைக்கு உடந்தையாக இருந்ததாக கண்ணம்மாள் மகள் பூங்கொடியும் கைது செய்யப்பட்டார்.

    இந்த நிலையில் நாகேந்திரனின் தங்கையான பெங்களூருவை சேர்ந்த நாகேஸ்வரி வெள்ள கோவில் போலீசில் புகார் செய்தார். அதில் கடந்த 5 மாதங்களாக எனது தாய் ராஜாமணியை (60) காணவில்லை.

    கடந்த மே மாதம் வெள்ளகோவிலில் நாகேந்திரன் மாமியார் வீட்டில் நடைபெற்ற விசே‌ஷத்திற்கு எனது தாயார் சென்றார். அதன் பின்னர் அவரை காணவில்லை. அவரும் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என சந்தேகப்படுவதாக புகாரில் கூறி இருந்தார்.

    போலீஸ் விசாரணையில் ராஜாமணியையும் கொலை செய்து வீட்டின் பின்புறத்தில் புதைத்தது தெரிய வந்தது. அவரை கண்ணம்மாளும், அவரது மகள் பூங்கொடியும் கொலை செய்து வீட்டின் பின்புறத்தில் புதைத்தது போலீஸ் விசாரணையில் கண்டு பிடிக்கப்பட்டது.

    இரட்டை கொலையில் ஏற்கனவே இவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளதால் அவர்களை காவலில் எடுத்து விசாரிக்க வெள்ளகோவில் போலீசார் காங்கயம் குற்றவியல் நடுவர் நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

    இதனை விசாரித்த நீதிபதி பிரவின் குமார் இவர்களை 2 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்தார்.

    இதனை தொடர்ந்து கண்ணம்மாள், பூங்கொடியை போலீசார் கோவை மத்திய சிறையில் இருந்து அழைத்து வந்தனர். ராஜாமணி உடல் புதைக்கப்பட்ட இடத்தை அவர்கள் அடையாளம் காட்டினார்கள்.

    இதனை தொடர்ந்து தாசில்தார் புனிதவதி முன்னிலையில் ராஜாமணி உடல் தோண்டி எடுக்கப்பட்டது. ராஜாமணி கொலை செய்யப்பட்டு 5 மாதங்கள் ஆகி விட்டதால் உடல் எலும்பு கூடாக காட்சி அளித்தது.

    உடலை ராஜாமணியின் மகள் நாகேஸ்வரியிடம் போலீசார் காண்பித்தனர். ராஜாமணி அணிந்திருந்த சேலையை வைத்து கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டது தனது தாயின் உடல் தான் என நாகேஸ்வரி அடையாளம் காட்டினார்.

    பின்னர் கோவை அரசு மருத்துவக் கல்லூரி டாக்டர் நந்தகுமார் தலைமையிலான மருத்துவக் குழுவினர் பிரேத பரிசோதனை செய்தனர். பின்னர் எலும்புக்கூடு ராஜாமணியின் மகள் நாகேஸ்வரியிடம் ஒப்படைக்கப்பட்டது. அதனை அவர் அங்குள்ள பொது மயானத்தில் புதைத்தார்.

    நாகேந்திரன் - பூங்கொடி தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். ராஜாமணியை கொலை செய்த அடுத்த நாள் கண்ணம்மாள், பூங்கொடி ஆகியோர் பூங்கொடியின் இரு குழந்தைகளையும் அழைத்து கொண்டு சமயபுரம் சென்றுள்ளனர். அங்கு 2 குழந்தைகளுக்கும் மொட்டையடித்து நேர்த்தி கடன் செலுத்தி உள்ளனர்.

    கொலை வழக்கில் நாகேந்திரனும்- பூங்கொடியும் தற்போது சிறையில் உள்ளதாக அவர்களது 2 குழந்தைகளும் திருப்பூரில் உள்ள காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

    கொலையாளிகள் கண்ணம்மாள், பூங்கொடியின் போலீஸ் காவல் இன்று மாலை 5 மணியுடன் நிறைவடைகிறது. எனவே அவர்களிடம் இன்று 2-வது நாளாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த கொலையில் இவர்கள் இருவர் மட்டுமின்றி வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்பது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. மாலை 5 மணிக்கு பின்னர் அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட உள்ளனர்.

    சொத்து தகராறில் தம்பியையும், அவரது மனைவியையும் கொன்று புதைத்த கணணம்மாள் தனது மகளுடன் சேர்ந்து சம்பந்தியையும் கொன்று வீட்டின் அருகில் புதைத்தது அப்பகுதி மக்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

    Next Story
    ×