search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராமதாஸ்
    X
    ராமதாஸ்

    விக்கிரவாண்டி மக்கள், ஸ்டாலினுக்கு பாடம் புகட்டி விட்டனர்- ராமதாஸ் தாக்கு

    விக்கிரவாண்டி தொகுதி மக்கள் ஸ்டாலினுக்கு பாடம் புகட்டியுள்ளதாக பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    இடைத்தேர்தல் முடிவுகள் குறித்து அறிக்கை வெளியிட்ட தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், சில கட்சிகள் திட்டமிட்டு கிளப்பிய சாதி உணர்வு தான் தி.மு.க.வின் தோல்விக்கு காரணம் என்றும், அதையும் தாண்டி தி.மு.க. அணிக்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் வாக்களித்திருப்பதாக கூறியுள்ளார். சாதி உணர்வை திட்டமிட்டு கிளப்பிய சந்தர்ப்பவாதிகள் யார்? என்பது அனைவருக்கும் நன்றாகத் தெரியும்.

    2016-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் விக்கிரவாண்டி தொகுதியில் தனித்துப் போட்டியிட்டு, சுமார் 42,000 வாக்குகளை பாட்டாளி மக்கள் கட்சி வென்றது. விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன், கூட்டணி தர்மத்தை மதித்து, அ.தி.மு.க.வுக்கு ஆதரவு அளித்த பா.ம.க. அக்கட்சியின் வேட்பாளரை ஆதரித்து தீவிர பரப்புரையில் ஈடுபட்டது.

    விக்கிரவாண்டியில் தி.மு.க.வுக்கு எதிராக வெறுப்பு அலை வீசுவதையும், அதனால் இடைத்தேர்தலில் தோல்வி உறுதி என்பதையும் உணர்ந்து கொண்ட மு.க.ஸ்டாலின், வழக்கம் போலவே புத்திசாலித்தனமாக செயல்படுவதாக நினைத்துக் கொண்டு, கடந்த 7-ந்தேதி ஓர் அறிக்கையை வெளியிட்டிருந்தார்.

    தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் வன்னியர்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்கப்படும் கோவிந்தசாமிக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என்று தொடங்கிய அந்த அறிக்கையில், தகுதியின் அடிப்படையில் பல்வேறு உயர் பதவிகளுக்கு வந்த வன்னியர்களின் பெயர்களை பட்டியலிட்டு, அவர்களுக்கெல்லாம் தி.மு.க. தான் பதவி வழங்கியதாகக் கூறி அவர்களைக் கொச்சைப்படுத்தியிருந்தார்.

    கலப்படமில்லாத பொய்களைக் கூறி வன்னிய மக்களை ஏமாற்ற முயன்றதுடன், வன்னிய சமுதாயமே தி.மு.க.விடம் மண்டியிட்டு யாசகம் பெற்றது போன்ற தோற்றத்தையும் ஏற்படுத்த ஸ்டாலின் முயன்றதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் தான், அவரது அறிக்கைக்கு ஆதாரத்துடன் பதில் அளித்தேன்.

    விக்கிரவாண்டி தேர்தல் களத்தில் பாட்டாளி மக்கள் கட்சியையும், என்னையும் வீழ்த்துவதற்காக இங்குள்ள சில வன்னியர்களை மு.க. ஸ்டாலின் களமிறக்கினார்.

    அவர்களும் முதலாளி விசுவாசத்தில் தெருவுக்குத்தெரு மேடைகளை அமைத்து ஸ்டாலின் கொடுத்த பொய் மூட்டைகளை அவிழ்த்துக் கொட்டினார்கள். கொள்கை பேசப்பட்டிருக்க வேண்டிய களத்தில் கோயபல்ஸ் பிரசாரத்தை தான் அவர்கள் நடத்தினார்கள்.

    விழுப்புரம் உள்ளிட்ட பல வட மாவட்டங்களில் பெரும்பான்மை வன்னிய சமுதாயத்தினர் தி.மு.க.வில் மாவட்ட அளவிலான பதவிகளுக்கு வந்துவிடக் கூடாது என்று தமது துதிபாடிகள் மூலம் அடக்கி வைத்திருக்கும் மு.க.ஸ்டாலின், திடீரென வன்னியக்காவலன் வேடமிட்டு வந்தால் அதை ரசிப்பதற்கு இது நாடகம் அல்ல... அரசியல்.

    போர்த்தொழில் புரியும் மக்கள் வியக்கத்தக்க வீரனுக்குத் தான் மகுடம் சூட்டுவார்கள், நயவஞ்சகனை நெருங்கக் கூட விடமாட்டார்கள். விக்கிரவாண்டி தேர்தல் களத்தில் வீரன் யார்? நயவஞ்சகர்கள் யார்? என்பதை அங்குள்ள மக்கள் நன்றாக அறிந்திருந்ததால் தான் இப்படி ஒரு தீர்ப்பை வழங்கியிருக்கிறார்கள். மு.க. ஸ்டாலினின் தீய நோக்கத்தை உணர்ந்து தோல்வியை பரிசாக அளித்திருக்கின்றனர்.

    சாதாரண நேரத்தில் எட்டு வழிச்சாலை வளர்ச்சிக்கான திட்டம் என்று கூறி விட்டு, தேர்தல் வந்தால் அத்திட்டத்தை எதிர்ப்பது போல நாடகமாடுவது, தேர்தலின் போது மதுவிலக்கு முழக்கமிட்டு விட்டு, தேர்தல் முடிந்ததும் திமு.க.வினர் நடத்தும் ஆலைகளில் மது உற்பத்தியை அதிகரிப்பது, நகைக்கடன் தள்ளுபடி செய்வதாக வாக்குறுதி அளித்து ஏழைகளை கடனாளி ஆக்குவது என தி.மு.க.வின் தேர்தல் திருவிளையாடல்கள் அனைத்துமே இரண்டாவது வகையைச் சேர்ந்தவை தான். ஆனால், இதற்கெல்லாம் இனி ஏமாறாத அளவுக்கு மக்கள் விழித்துக் கொண்டுள்ளனர்.

    தி.மு.க.வில் உள்ள வெள்ளை மனம் படைத்த வன்னியர்களும் மொத்தமாக சுரண்டப்படுவதற்கு முன்பாக விழித்துக் கொண்டு பாதுகாப்பான இடத்தில் தஞ்சமடைய வேண்டும். இதற்கெல்லாம் மேலாக இனியாவது ஏமாற்றும் அரசியலை கைவிட்டு, அறம் சார்ந்த அரசியல் செய்ய மு.க. ஸ்டாலின் முன்வர வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×