search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    கர்நாடகா போலீசார் எடுத்து சென்ற நகைகளை ஒப்படைக்க வேண்டும்- பெங்களூர் கோர்ட்டில் திருச்சி போலீசார் மனு

    திருச்சியில் கொள்ளை போன நகைகளை தங்களிடம் ஒப்படைக்க கோரி பெங்களூர் கோர்ட்டில் திருச்சி போலீசார் மனு செய்துள்ளனர்.
    திருச்சி:

    திருச்சி லலிதா ஜூவல்லரி நகைக்கடை கொள்ளை வழக்கில் பெங்களூர் கோர்ட்டில் சரணடைந்த பிரபல கொள்ளையன் திருவாரூர் முருகனை அம்மாநில போலீசார் காவலில் எடுத்து விசாரித்து வருகிறார்கள்.

    கர்நாடகாவில் அவன் மீது 80-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ள நிலையில் 2-வது முறையாக காவலில் எடுத்த போலீசார் பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்று நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல்கள் கிடைத்துள்ளன.

    கொள்ளையன் முருகனை திருச்சிக்கு அழைத்து வந்து விசாரிக்க தனிப்படை போலீசார் தீவிரமாக உள்ளனர். இதற்கிடையே திருச்சியில் கொள்ளை போன நகைகளை தங்களிடம் ஒப்படைக்க கோரி பெங்களூர் கோர்ட்டில் திருச்சி போலீசார் மனு செய்துள்ளனர். இது பற்றி போலீஸ் அதிகாரி கூறியதாவது:-

    திருச்சி லலிதா ஜூவல்லரி நகைக்கடையில் கொள்ளை போன நகைகளில் பெருமளவு மீட்கப்பட்டுள்ளன. கொள்ளை கும்பல் தலைவன் முருகனிடம் மட்டும் விசாரணை நடத்தவேண்டி உள்ளது. அவனிடம் பெற வேண்டிய தகவல்கள் ஏராளமாக உள்ளதால் அவனை காவலில் எடுத்து விசாரிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

    அடுத்த வாரம் எங்களுக்கு பெங்களூர் கோர்ட்டு அனுமதி அளிக்கும் என்று எதிர்பார்க்கிறோம். இதற்கிடையே பெங்களூர் போலீசார் திருவாரூர் முருகனை திருச்சிக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி திருவெறும்பூர் அருகே பூசத்துறை பகுதியில் மண்ணில் புதைத்து வைத்திருந்த 12 கிலோ நகைகளை மீட்டு சென்றனர்.

    அந்த நகைகள் அனைத்தும் திருச்சி லலிதா ஜூவல்லரியில் கொள்ளையடிக்கப்பட்டதாகும். இதனை வழக்கின் விசாரணைக்காக எங்களிடம் ஒப்படைக்க கோரி பெங்களூர் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளோம். இதற்காக திருச்சி போலீசார் பெங்களூருவில் முகாமிட்டுள்ளனர். கோர்ட்டில் உரிய அனுமதி பெற்று அந்த நகைகள் திருச்சி கொண்டு வரப்படும்.

    மேலும் பஞ்சாப் நே‌ஷனல் வங்கியில் கொள்ளையடித்த நகை மற்றும் பணத்தை கொள்ளையர்கள் என்ன செய்தார்கள்? என்ற விபரம் தெரியவில்லை. அதனை திருச்சி மாவட்ட போலீசார் விசாரித்து வருகிறார்கள். தற்போது போலீஸ் காவலில் இருக்கும் கணேசன் மூலம் அதுபற்றி விபரம் தெரிய வரும் என்று எதிர்பார்க்கிறோம். முருகனை போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தால் மேலும் பல தகவல்கள் வெளிவரும் என்றார்.
    Next Story
    ×