search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராமதாஸ்
    X
    ராமதாஸ்

    நாங்குநேரி, விக்கிரவாண்டி தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு வாக்களிக்க வேண்டும்- ராமதாஸ் வேண்டுகோள்

    தமிழகத்தில் அமைதியான ஆட்சி தொடர நாங்குநேரி, விக்கிரவாண்டி தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு வாக்களிக்க வேண்டும் என்று ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் இடைத்தேர்தல் நடைபெறும் விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில் இன்று மாலை 6 மணியுடன் பிரசாரம் நிறைவடையவுள்ளது. கடந்த இரு வாரங்களாக நிலவிய பிரசாரம் சூடு தணிந்து, அமைதி நிலவக்கூடிய அடுத்த 48 மணி நேரம் தான் தமிழகத்தைத் தொடர்ந்து காப்பாற்ற மேற்கொள்ள வேண்டிய முடிவு குறித்து மக்கள் சிந்தித்து தீர்மானிப்பதற்கு மிகவும் சரியான நேரமாகும்.

    தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசுக்கு பெரும்பான்மைக்கு தேவையான ஆதரவை விட கூடுதலாகவே சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்ளனர். அதேநேரத்தில் திமுக இந்த இரு தொகுதிகளையும் வென்றால் கூட, தமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்பது குறித்து நினைத்துக் கூட பார்க்க முடியாது. அதனால், விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளின் இடைத்தேர்தல் முடிவுகள் தமிழக அரசியலில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தி விடாது; ஆட்சிப் பயணத்திற்கு எந்த தடையும் ஏற்பட்டு விடாது.

    அதேநேரத்தில் தமிழ்நாட்டு சட்டப்பேரவைக்கு அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் நடைபெறவிருக்கும் பொதுத்தேர்தலுக்கான முன்னோட்டமாகவே இந்த இரு தொகுதிகளின் இடைத்தேர்தல் பார்க்கப்பட வேண்டும். மக்களின் நலன்களை கருத்தில் கொண்டு சாத்தியமாகக் கூடிய வாக்குறுதிகளை அளிக்கும் அதிமுக, பாட்டாளி மக்கள் கட்சி கூட்டணி தான் இந்த இடைத்தேர்தலில் வெற்றி பெற வேண்டும்.

    தி.மு.க. தலைமையிலான கூட்டணியோ மக்களை ஆசைக்காட்டி ஏமாற்றும் வகையிலான வாக்குறுதிகளை அளித்து பாராளுமன்ற தேர்தலை சந்தித்தது. திமுக கூட்டணி விரித்த மாயவலையில் விழுந்த மக்களும், மக்களவைத் தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்தனர். ஆனால், தேர்தலின் போது அளித்த எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றி வருகிறது திமுக அணி.

    மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தேவேந்திரர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றப் போவதாக வாக்குறுதி அளிக்கிறார் திமுக தலைவர். அசுரன் படத்தைப் பார்த்து விட்டு படமல்ல... பாடம் என்று நடிக்கிறார். வாக்குகளை வளைக்க திமுக எதை வேண்டுமானாலும் செய்யும் என்பதற்கு இதைவிட சிறந்த உதாரணம் வேறு எதுவும் இருக்க முடியாது.

    இடைத்தேர்தலாக இருந்தாலும், பொதுத்தேர்தலாக இருந்தாலும் தி.மு.க. வெற்றி பெற்றால், அதனால் பாதிக்கப்படப்போவது அப்பாவி மக்கள் தான். அதிமுக வெற்றி பெற்றால் இரு தொகுதிகளிலும் ஏராளமான மக்கள் நலத் திட்டங்கள் செயல்படுத்தப்படும். மாறாக, திமுக வெற்றி பெற்றால் அத்துமீறல்கள் தான் நடக்கும். இவற்றையெல்லாம் மனதில் கொண்டு, விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய இரு தொகுதிகளிலும் வாக்களிக்க வேண்டும்; தமிழகத்தில் அமைதியான ஆட்சி தொடர இரு தொகுதிகளிலும் அதிமுகவை வெற்றி பெறச் செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    Next Story
    ×