search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    கணவரை கழுத்தை நெரித்து கொன்ற மனைவி கைது

    சென்னை அருகே தோசையில் தூக்க மாத்திரையை கலந்து கணவரை கழுத்தை நெரித்து கொன்ற மனைவி, வாலிபருடன் கைது செய்யப்பட்டார்.
    சென்னை:

    புழல் புத்தகரம் வெங்கடசாய் நகர் 13-வது தெருவில் வசித்து வந்தவர் சுரேஷ். இவருக்கும் விழுப்புரம் அருகே உள்ள முகையூரைச் சேர்ந்த அனுசுயாவுக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

    சுரேஷ் விழுப்புரத்தில் நடந்த ஒரு திருமண விழாவில் பங்கேற்க சென்ற போது அனுசுயாவை பார்த்தார். அப்போது இருவருக்கும் காதல் மலர்ந்தது. பெற்றோர்கள் சம்மத்துடன் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 4 வயதில் லோகேஷ் என்ற மகன் இருக்கிறான்.

    சுரேஷ் அதே பகுதியில் உள்ள கறிக்கடையில் வேலை செய்து வந்தார். பட்டதாரியான அனுசுயா மருந்து கடையில் பணிபுரிந்து வருகிறார்.

    அனுசுயாவின் நடத்தையில் சுரேசுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் அவரை அடித்து உதைத்தார். நீண்ட நேரம் போன் பேசுவதாக கூறி கண்டித்தார்.

    இதனால் மன உளைச்சல் அடைந்த அனுசுயா கணவரை தீர்த்து கட்ட முடிவு செய்தார். இதுபற்றி தனது ஊரைச் சேர்ந்த வாலிபர் முரசொலி மாறனிடம் தெரிவித்தார்.

    இருவரும் சேர்ந்து சுரேசை கொலை செய்ய திட்டமிட்டனர். விழுப்புரத்தில் இருந்து முரசொலி மாறன் நேற்று முன்தினம் சென்னை வந்தார்.

    மாலையில் மருந்து கடையில் இருந்து பணி முடிந்து திரும்பிய அனுசுயா தூக்க மாத்திரைகளை எடுத்து வந்தார். இரவில் கணவர் சுரேசுக்கு தெரியாமல் தூக்க மாத்திரைகளை பொடி செய்து தோசை மாவில் கலந்தார்.

    இந்த மாவை தோசை சுட்டு சுரேசுக்கு கொடுத்தார். இதனை சாப்பிட்ட அவர் சிறிது நேரத்திலேயே தூங்க சென்றார்.

    நேற்று முன்தினம் இரவு 10.30 மணி அளவில் முரசொலி மாறனை அனுசுயா வீட்டுக்குள் வர சொன்னார்.

    படுக்கையில் மயக்க நிலையில் இருந்த சுரேசை இருவரும் சேர்ந்து கொலை செய்தனர். முரசொலி மாறன் இரண்டு கால்களையும் பிடித்துக் கொள்ள அனுசுயா துப்பாட்டாவால் கணவர் என்று பாராமல் கழுத்தை நெரித்து சுரேசை துடிக்க துடிக்க கொலை செய்தார்.

    பிறகு முரசொலி மாறன் எதுவும் தெரியாதது போல் வீட்டை விட்டு வெளியே சென்று விட்டார். அனுசுயாவும் ஒன்றும் தெரியாதவரை போல் இரவு முழுவதும் வீட்டிலேயே தூங்கினார்.

    நேற்று காலையில்தான் சுரேஷ் இறந்தது பற்றி அக்கம் பக்கத்தில் தெரிய வந்தது. இதுபற்றி தகவல் கிடைத்ததும் புழல் போலீசார் விரைந்து சென்றனர்.

    உதவி கமி‌ஷனர் ரவி, இன்ஸ்பெக்டர் தங்கதுரை ஆகியோர் சுரேஷ் மரணம் பற்றி அனுசுயாவிடம் விசாரித்தனர். அவர் நேற்று இரவு கடைக்கு சென்று விட்டு திரும்பி வருவதற்குள் தனது கணவர் வீட்டில் இறந்து கிடந்தார். அதிகமாக மது அருந்தியதால் அவர் இறந்து இருக்கலாம் என்று கூறி நாடகம் ஆடினார்.

    ஆனால் சுரேசின் கழுத்தில் லேசான காயம் இருந்தது. இதையடுத்து அனுசுயா மீது போலீசுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரை தனியாக அழைத்து சென்று விசாரித்தனர். அப்போது கணவரை கொலை செய்ததை ஒத்துக்கொண்டார்.

    அனுசுயா போலீசில் அளித்த வாக்குமூலத்தில், கணவர் தினமும் குடித்து விட்டு வந்து சித்ரவதை செய்ததாகவும் இதனால் அவருடன் வாழ பிடிக்காமல் கொலை செய்ய முடிவு செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.

    அனுசுயாவை போலீசார் கைது செய்தனர். தப்பி ஓடிய அவரது நண்பர் முரசொலி மாறனும் போலீசில் சிக்கினார். இருவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
    Next Story
    ×