search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மோதலை தடுக்க போலீசார் துப்பாக்கி சூடு நடத்திய காட்சி.
    X
    மோதலை தடுக்க போலீசார் துப்பாக்கி சூடு நடத்திய காட்சி.

    புதுவை அருகே 2 கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் மோதல்- போலீஸ் துப்பாக்கி சூடு

    புதுவை அருகே எல்லைதாண்டி மீன் பிடிப்பது தொடர்பாக 2 கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் மோதலில் ஈடுபட்டதால் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த சம்பவத்தால் மீனவ கிராமங்களில் தொடர்ந்து பதட்டம் நிலவி வருகிறது.
    பாகூர்:

    புதுவை வீராம்பட்டினம் மீனவர்களுக்கும், தவளக்குப்பம் அருகே நல்லவாடு மீனவர்களுக்கும் எல்லைதாண்டி மீன் பிடிப்பது, சுருக்கு வலை பயன்படுத்துவது தொடர்பாக அடிக்கடி மோதல் இருந்து வருகிறது. கடந்த மாதம் நல்லவாடு மீனவர்கள் கடலில் மீன்பிடித்த போது அவர்கள் எல்லைதாண்டி மீன் பிடித்ததாக கூறி வீராம்பட்டினம் மீனவர்கள் 100-க்கும் மேற்பட்டோர் பயங்கர ஆயுதங்களுடன்  படகில் சென்று நல்லவாடு மீனவர்களை தாக்கினர். இதனை அறிந்த நல்லவாடு மீனவர்கள் வீராம்பட்டிணம் மீனவர்களை தாக்க தயாராகினர். இதனை அறிந்த அரியாங்குப்பம் போலீசார் மற்றும் ரெட்டிச்சாவடி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று  இருதரப்பு மீனவர்களையும் சமாதானப்படுத்தினர். 

    இந்த சம்பவம் நடந்து முடிந்த  2 நாளில் நல்லவாடு மீனவர்கள் வைத்திருந்த மீன்வலையை வீராம்பட்டினத்தை சேர்ந்த சிலர் எரித்து விட்டனர். இதனால் 2 மீனவ கிராமங்களுக்கும் இடையே மீண்டும் மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் தலையிட்டு இருதரப்பு மீனவர்களையும் அழைத்து சமாதானம் கூட்டம்  நடத்தினர். அப்போது இருதரப்பு மீனவர்களும்  ஒருவருக்கொருவர் குற்றச்சாட்டு எழுப்பியதால் சமாதான கூட்டம் பாதியிலேயே முடிந்தது. அதன்பிறகு கடந்த சில நாட்களாக  இருதரப்பு மீனவர்களும் மோதலில் ஈடுபடாமல் இருந்து வந்தனர். 

    இந்த நிலையில் இன்று காலை நல்லவாடு மீனவர்கள் கடலில்  மீன்பிடித்து கொண்டு இருந்தனர். அப்போது எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி அவர்களை வீராம்பட்டினம் மீனவர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும் அரிவாளாலும் வெட்டியதாக தெரிகிறது.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் நல்லவாடு மீனவர்கள் 100-க்கும் மேற்பட்டோர் கத்தி, வீச்சரிவாள், சுளுக்கி உள்ளிட்ட  பயங்கர  ஆயுதங்களுடன் வீராம்பட்டினம் மீனவர்களை தாக்க படகில் கடலுக்கு சென்றனர்.

    அதுபோல வீராம்பட்டினம் மீனவர்களும் மோதலுக்கு தயாராகி சுமார் 500-க்கும் மேற்பட்டோர் ஆயுதங்களுடன் விசைப்படகில் சென்றனர். நல்லவாடு புதுக்குப்பம் பகுதியில்  இருதரப்பு மீனவர்களும்  ஆயுதங்களால் மாறி மாறி தாக்கி கொண்டனர். அப்போது வீராம்பட்டினம் மீனவர்கள் நாட்டு வெடிகுண்டுகளை வீசியதில் நல்லவாடு மீனவர்கள் 5 பேர் காயம் அடைந்தனர். 

    இதுபற்றி தகவல் அறிந்ததும்  போலீசார் 200-க்கும் மேற்பட்டோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். இருதரப்பு  மீனவர்களையும் கலைந்து செல்லுமாறு போலீசார் பலமுறை அறிவுறுத்தினர். ஆனால் இருதருப்பினரும் கலைந்து செல்லாமல் தொடர்ந்து மோதலில் ஈடுபட்டதால் போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சூட்டனர். ஆனாலும் கலைந்து செல்லவில்லை. இதனால் கூட்டத்தை நோக்கியும் சுட்டனர். அதன்பிறகே இரதரப்பு மீனவர்களும் மோதலை கைவிட்டு ஓடினார்கள். மொத்தம் 20 ரவுண்டு துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது.

    இந்த மோதலில் அரிவாள் வெட்டு மற்றும் வெடிகுண்டு வீச்சில் 5 பேர் காயம் அடைந்தனர். இந்த மோதல் காரணமாக வீராம்பட்டினம்- நல்லவாடு மீனவ கிராமங்களில் தொடர்ந்து பதட்டம்  நிலவி வருகிறது. 2 கிராமங்களிலும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
    Next Story
    ×