search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கேஎஸ் அழகிரி
    X
    கேஎஸ் அழகிரி

    ஆற்றுப்பாசன திட்டத்தை கிடப்பில் போட்டது அதிமுக அரசு- கே.எஸ். அழகிரி குற்றச்சாட்டு

    நம்பியாறு, தாமிரபரணி, கருமேனியாறு ஆற்றுப்பாசன திட்டத்தை கிடப்பில் போட்டது அ.தி.மு.க. அரசு தான் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி குற்றச்சாட்டியுள்ளார்.
    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    நாங்குநேரி தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் பிரசாரம் செய்த தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தி.மு.க. ஆட்சிக்காலத்தில் தொடங்கப்பட்ட தாமிரபரணி, நம்பியாறு, கருமேனியாறு இணைப்பு நீர்ப்பாசன திட்டம் குறித்து ஆதாரமற்ற அவதூறான கருத்துக்களை கூறியிருக்கிறார். இத்திட்டத்தை பொறுத்தவரை கலைஞர் முதலமைச்சராக இருந்த போது, 2009 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் ரூ.369 கோடி ஒதுக்கப்பட்டு நிறைவேற்றுவதற்கு உரிய ஆணைகள் பிறப்பிக்கப்பட்டன.

    தாமிரபரணி ஆற்றில் இருந்து வீணாக ஆண்டு தோறும் கடலில் கலக்கிற 14 டி.எம்.சி. நீரை தடுத்து நிறுத்தி, இத்திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு பயன் தருகிற வகையில் நிறைவேற்றுவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. இத்திட்டம் தொடங்கப்பட்டு 2 வருடங்களில் ரூபாய் 214 கோடி செலவிடப்பட்டு திட்டத்தின் பாதி வேலைகள் முடிந்து விட்டன. இந்நிலையில் 2011-ல் முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற ஜெயலலிதா இத்திட்டத்தை கிடப்பில் போடுகிற முடிவை அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு எடுத்தார்.

    முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அப்பாவு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கில் தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் 2016க்குள் இத்திட்டத்தை முடித்து விடுவோம் என்று உறுதிமொழி கூறியது.

    ஆனால், அதன்படி எந்த வேலையும் தொடங்கப்படவில்லை. மீண்டும் 2017-ல் தமிழக அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. அப்போது, தமிழக அரசு இத்திட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை என்று காரணம் கூறியது. ஆனால், சென்னை உயர்நீதிமன்றம் கடுமையான கண்டனத்தை தமிழக அரசு மீது தெரிவித்து இத்திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டுமென்று ஆணை பிறப்பித்தது.

    இந்நிலையில், முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இத்திட்டம் 2020-ம் ஆண்டுக்குள் நிறைவேற்றப்படும் என்று நாங்குநேரி சட்டமன்ற தொகுதி மக்களை ஏமாற்றுவதற்காக பொய்யான வாக்குறுதியை வழங்கியிருக்கிறார்.

    இந்த நீர்ப்பாசன திட்டத்தை நிறைவேற்றுவதில் இப்பகுதிகளுக்கு குறிப்பாக நாங்குநேரி சட்டமன்ற தொகுதி மக்களுக்கு அ.தி.மு.க. அரசு செய்த துரோகத்திற்கு உரிய பாடத்தை வாக்காளப் பெருமக்கள் வருகிற தேர்தல் நாள் அன்று நிச்சயம் தங்களது வாக்குகள் மூலம் வெளிப்படுத்துவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×