search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னை வானிலை ஆய்வு மையம்
    X
    சென்னை வானிலை ஆய்வு மையம்

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை 17-ந் தேதி தொடங்க வாய்ப்பு

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை 17-ந் தேதி தொடங்க வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
    சென்னை:

    வெப்ப சலனம் மற்றும் தென்மேற்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, நாமக்கல் உள்ளிட்ட உள் மாவட்டங்களில் மழை பெய்தது. இந்த நிலையில் வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் இன்று (திங்கட்கிழமை) மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

    இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தென்னிந்திய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கில் கிழக்கு திசை காற்று வீச தொடங்கியுள்ளது. தென்மேற்கு பருவமழை வடக்கு மற்றும் மத்திய இந்திய பகுதிகளில் இருந்து படிப்படியாக விலகி வரும் நிலையில், வடகிழக்கு பருவமழை வருகிற 17-ந் தேதியையொட்டி தொடங்க வாய்ப்பு உள்ளது.

    பொதுவாக வடகிழக்கு பருவமழை காலம் என்பது அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்கள் தான். கடந்த ஆண்டு 44 செ.மீ. அளவில் வடகிழக்கு பருவமழை பெய்தது. இது இயல்பான அளவை காட்டிலும் 24 சதவீதம் குறைவாகும். இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை 20-ந் தேதி தான் தொடங்கவேண்டும். ஆனால் சில சாத்தியக்கூறுகள் அடிப்படையில் 3 நாட்கள் முன்னதாக எதிர்பார்க்கிறோம்.

    கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் - புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் வெப்ப சலனம் காரணமாக மழை பெய்துள்ளது.

    அடுத்து வரும் 24 மணி நேரத்தில் (இன்று) தமிழகம் - புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வட தமிழகத்தின் உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரையில் சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

    நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் 13 செ.மீ. மழை பெய்துள்ளது. சேலம் மாவட்டம் சங்கரிதுர்க், ஈரோடு மாவட்டம் பவானி, நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தில் தலா 6 செ.மீ. மழையும், ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் 5 செ.மீ. மழையும்,

    ஈரோடு மாவட்டம் பவானிசாகர், கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை, திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை, விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் தலா 4 செ.மீ. மழை பெய்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×