search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    கல்லூரி பேராசிரியையை மிரட்டி ஆபாச வீடியோ- ஆந்திர மாணவர் கைது

    கிழக்கு கடற்கரை சாலையில் கல்லூரி பேராசிரியையை மிரட்டி ஆபாச வீடியோ எடுத்த ஆந்திர மாணவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
    சென்னை:

    ஆந்திராவை சேர்ந்தவர் விவேஷ் (வயது 23). இவர் காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரம் அருகே உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் என்ஜினியரிங் படித்து வருகிறார்.

    அம்பத்தூர் பகுதியில் வாடகை வீட்டில் தங்கிய இவர் பகுதி நேரமாக ஒரு தனியார் நிறுவனத்திலும் பணிபுரிந்து வந்தார். விவேஷ் படித்த பல்கலைக்கழகத்தில் ஆந்திராவை சேர்ந்த 25 வயது இளம்பெண் ஒருவர் உதவி பேராசிரியையாக பணிபுரிந்து வந்தார்.

    ஒரே மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பதால் விவேசுடன் பேராசிரியை நட்பாக பழகி உள்ளார். கடந்த 19-ந்தேதி விவேஷ் தன்னுடைய படிப்பு நிறைவு பெறுவதாகவும், அதற்காக ‘பார்ட்டி’ தருவதாகவும் கூறி பேராசிரியையை வெளியே அழைத்தார். அதற்கு பேராசிரியை சம்மதித்தார்.

    இரவு 7 மணி அளவில் சோழிங்கநல்லூரில் பேராசிரியை தங்கியிருந்த மகளிர் விடுதிக்கு விவேஷ் சென்றார். பேராசிரியையை தனது இருசக்கர வாகனத்தில் ஏற்றிக் கொண்டு கிழக்கு கடற்கரைசாலையில் சென்றார். மாமல்லபுரத்தை அடுத்த பூஞ்சேரி அருகே இருள் சூழ்ந்த பகுதிக்குள் வாகனத்தை இயக்கினார்.

    இதனால் பயந்து போன பேராசிரியை இங்கே எதற்கு செல்கிறீர்கள்? என கேட்டார். அதற்கு உள்ளே ஒரு விடுதி உள்ளது. அங்கு தான் விருந்துக்கு ஏற்பாடு செய்துள்ளேன் என விவேஷ் கூறினார். சிறிது நேரத்தில் ஆள் ஆரவாரமற்ற சவுக்கு மரங்கள் அடர்ந்த காட்டுப்பகுதிக்கு சென்ற போது திடீரென விவேஷ் வாகனத்தை நிறுத்திதான் மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி பேராசிரியை அணிந்திருந்த ஆடைகளை அகற்றுமாறு மிரட்டினார். இதனால் அதிர்ச்சியடைந்த பேராசிரியை கெஞ்சியும் கேட்காத விவேஷ் அவரை நிர்வாணப்படுத்தி, செல்போனில் வீடியோ எடுத்துள்ளார்.

    இதை வெளியே சொல்லக்கூடாது என மிரட்டி விட்டு, பேராசிரியையை மீண்டும் தனது வாகனத்தில் ஏற்றி விடுதியில் விட்டு சென்றார். மறுநாள் பேராசிரியைக்கு போன் செய்த விவேஷ் தன்னோடு உல்லாசமாக இருக்க வேண்டும், இல்லா விட்டால் நிர்வாண வீடியோவை வெளியிட்டு விடுவேன் என மிரட்டினார்.

    இதனால் அதிர்ந்து போன பேராசிரியை செம்மஞ்சேரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார் விவேசை கைது செய்தனர். அவரின் செல்போனை பறிமுதல் செய்து, அதில் இருந்த பேராசிரியை நிர்வாண வீடியோவை அழித்தனர்.

    பேராசிரியைக்கு சென்னையில் யாரும் இல்லாததால் போலீசில் புகார் அளிக்கமாட்டார் என கருதி அவரிடம் அத்துமீறி நடந்துக்கொண்டதாக விவேஷ் போலீசாரிடம் கூறி உள்ளார். அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
    Next Story
    ×