search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    அன்னூர் பகுதியில் வீட்டில் கஞ்சா பதுக்கி விற்ற வடமாநில தம்பதி கைது

    அன்னூர் பகுதியில் வீட்டில் கஞ்சா பதுக்கி விற்ற வடமாநில தம்பதியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை:

    கோவை-அன்னூர் ரோட்டில் கணேசபுரம் அருகே அன்னூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர்.

    அப்போது அந்த வழியாக வந்த மொபட்டை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். சோதனை செய்த போது மொபட்டில் விற்பனைக்காக 3 கிலோ கஞ்சாவை கடத்தி வந்தது தெரிய வந்தது.

    பின்னர் அவரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் இவர் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த அக்‌ஷயா தாஸ் (வயது 40) என்பதும் இவர் கடந்த 10 வருடங்களாக அன்னூர் அருகே உள்ள மாசகவுண்டன் பாளையத்தில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி இருப்பதும் தெரிய வந்தது.

    மேலும் இவர் வட மாநிலத்தில் இருந்து ஆட்களை வேலைக்கு அமர்ந்தும் ஏஜெண்டாக இருப்பதும் தெரிய வந்தது.

    இவர் கடந்த சில வருடங்களாக இவரது மனைவி பிஜாய் லட்சுமி தாஸ் (30) என்பவருடன் சேர்ந்து ஆந்திராவில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்து வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரிய வந்தது.

    இதனையடுத்து போலீசார் வீட்டுக்கு சென்று சோதனை நடத்தினர்.

    சோதனையில் வீட்டில் இருந்து 23½ கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் கணவருடன் சேர்ந்து கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்த பிஜாய் லட்சுமி தாசை கைது செய்தனர். இவர்கள் பயன்படுத்திய ஒரு மொபட்டையும் , போலீசார் பறிமுதல் செய்தனர்.

    விசாரணை முடிந்த பின்னர் கணவன்-மனைவி இருவரையும் மேட்டுப்பாளையம் கோர்ட்டில் ஆஜர் படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×