search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொலை
    X
    கொலை

    பெரம்பலூரில் இரட்டைக்கொலை - 4 பேர் கைது

    பெரம்பலூரில் குடிபோதை தகராறில் நடந்த இரட்டை கொலை சம்பவம் கிராம பொதுமக்களிடையே சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
    குன்னம்:

    பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள இலுப்பையூர் கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்தன் (வயது 38). இவர் திருமணமாகி குடும்பத்தினருடன் தனது மாமனார் ஊரான குன்னம் அருகே உள்ள நல்லறிக்கை கிராமத்தில் வசித்து வந்தார்.

    அதே கிராமத்தில் இருசக்கர வாகனம் பழுது பார்க்கும் மெக்கானிக்கடையும் வைத்து தொழில் செய்து வந்தார். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) விடுமுறை நாள் என்பதால் ஆனந்தன் மாலையில், அதே கிராமத்தில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்று மதுவாங்கி கடைக்கு அருகே அமர்ந்து அருந்தி கொண்டிருந்தார்.

    அப்போது அதே கிராமத்தைச் சேர்ந்த ஆட்டோ டிரைவரான சண்முகம் (40) என்பவரும் வந்து மது அருந்தி கொண்டிருந்தார். அளவுக்கு அதிகமாக மது குடித்ததால் போதையில் இருந்த ஆனந்தனுக்கும், சண்முகத்திற்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு, கை கலப்பானது.

    இதில் ஒருவருக்கொருவர் சரமாரியாக தாக்கி கொண்டனர். அப்போது ஆத்திரத்தில் ஆனந்தன், கீழே கிடந்த கத்தியை எடுத்து சண்முகத்தை சரமாரியாக குத்தினார். ரத்த வெள்ளத்தில் சரிந்த சண்முகம் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். இதுகுறித்து தகவலறிந்து அங்கு விரைந்து வந்த சண்முகத்தின் உறவினர்கள் சிலர் ஆனந்தனை கத்தி மற்றும் பீர்பாட்டிலால் சரமாரியாக குத்தினர். இதில் படுகாயமடைந்த ஆனந்தன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    உயிருக்கு போராடி கொண்டிருந்த சண்முகத்தை அங்கிருந்தவர்கள் உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் கொண்டு செல்லும் வழியிலேயே சண்முகமும் உயிரிழந்தார்.

    இதுகுறித்து தகவலறிந்ததும் சம்பவ இடத்திற்கு மங்களமேடு சரக துணை போலீஸ் சூப்பிரண்டு தேவராஜன் தலைமையில், குன்னம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) மாலதி மற்றும் போலீசார் சென்று, ஆனந்தனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா பார்த்திபன் கொலை நடந்த இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினார். இந்த சம்பவம் தொடர்பாக குன்னம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சண்முகத்தின் சகோதரர் முருகானந்தம் (38), ஆரோக்கியராஜ் உள்பட 4 பேரை கைது செய்தனர்.

    கொலை செய்யப்பட்ட சண்முகம், ஆனந்தன் ஆகிய 2 பேரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள். ஏற்கனவே இரு சமூகத்தினர் இடையே கோவில் திருவிழா, தேர்தல் தொடர்பாக தகராறு ஏற்பட்டு, போலீஸ் நிலையங்களில் வழக்குகள் உள்ளது. தற்போது 2 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இதையடுத்து அசம்பாவி தங்கள் ஏற்படாதவாறு இருக்க போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் குடிபோதை தகராறில் நடந்த இரட்டை கொலை சம்பவம் நல்லறிக்கை கிராம பொதுமக்களிடையே சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

    இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்படுவதை தடுக்கும் வகையில் போலீசார் கிராமம் முழுவதும் ரோந்து சுற்றி வருகின்றனர். இதனால் கிராம மக்கள் வீடுகளில் இருந்து வெளியே வராமல் உள்ளனர். இதனால் நல்லறிக்கை கிராமமே ஆட்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது. இறந்து போன ஆனந்தனுக்கு சத்தியபிரியா என்ற மனைவியும், தர்ஷினி (12) என்ற மகளும், வெற்றி (8) என்ற மகனும் உள்ளனர்.

    Next Story
    ×