search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருமாவளவன்
    X
    திருமாவளவன்

    பேனர் வைப்பதை வரைமுறைப்படுத்த சட்டம் இயற்ற வேண்டும்- திருமாவளவன்

    பேனர் வைப்பதற்கு ஒரு சில நடைமுறைகளை உயர்நீதிமன்றம் தந்தாலும்கூட அதை நடைமுறைப்படுத்துவதற்கு சட்டம் இயற்ற வேண்டும் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
    மதுரை:

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மதுரை விமான நிலையத்தில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஒரே தேசம், ஒரே கலாசாரம் என்ற கொள்கையை செயல்படுத்துவதில் கடந்த 5 ஆண்டு கால ஆட்சியின் போது பா.ஜ.க. அரசு தீவிரம் காட்டியது. அப்போதே விடுதலை சிறுத்தைகள் கட்சி இது ஒரு ஆபத்தான முயற்சி என்று சுட்டிக்காட்டியது.

    மீண்டும் அவர்கள் ஆட்சிக்கு வந்துள்ள நிலையில் எடுத்தேன் கவிழ்த்தேன் என்ற அடிப்படையில் தான்தோன்றித்தனமான முடிவுகளை எடுத்து வருகின்றனர்.

    ஜம்மு காஷ்மீர் பிரச்சனையில் அரசு எடுத்திருக்கின்ற முடிவு அதை உறுதிப்படுத்துகிறது. தற்போது வெளிப்படையாகவே உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஒரே தேசம் ஒரே மொழி என்ற கொள்கை இருந்தால்தான் இந்தியா வல்லரசு நாடாக இருக்க முடியும் என்று கூறியிருக்கிறார்.

    இதுதான் அவர்களின் நீண்ட கால கனவுத் திட்டம். அவர்களின் வழிகாட்டு இயக்கமாக இருக்கிற ஆர்.எஸ்.எஸ்., சங்பரிவார் அமைப்புகளின் செயல் திட்டங்களை செயல்படுத்துகிற அரசாகத்தான் பா.ஜ.க. அரசு இருக்கிறது.

    ஒரே தேசம் ஒரே கலாசாரம் என்றால் ஒரே தேசம் ஒரே மதம் ஒரே தேசம் ஒரே மொழி என்று பொருள்.

    இந்தி மொழியைத் தவிர வேறு மொழி எதுவும் இருக்கக்கூடாது, இந்து மதத்தை தவிர வேறு மதம் இருக்கக் கூடாது என்பதுதான் அவர்களின் இறுதி இலக்கு. அதற்கேற்ப கல்விக் கொள்கையையும் அவர்கள் மாற்றி வருகிறார்கள். இது மிகவும் ஆபத்தானது.

    இன்றைய ஜனநாயகத்தில் நாம் விழித்துக்கொள்ள வேண்டிய தருணம் இது என்பதை விடுதலை சிறுத்தைகள் கட்சி மீண்டும் சுட்டிக்காட்டுகிறது.

    சுபஸ்ரீ


    பேனர் விவகாரத்தில் ஆளுங்கட்சிக்கு ஒரு அணுகுமுறை, பிற கட்சிக்கு ஒரு அணுகுமுறை என்ற அடிப்படையில்தான் பேனர் உள்ளிட்ட செயல்பாடுகளில் காவல்துறை செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. ஓரவஞ்சனையான அணுகுமுறையால் தான் பல அத்துமீறல்கள் நடந்து கொண்டிருக்கின்றன. பல்லாவரம் சுபஸ்ரீயின் மரணம்கூட இப்படித்தான் நடந்துள்ளது.

    எனவே பேனர் வைப்பதற்கு ஒரு சில நடைமுறைகளை உயர்நீதிமன்றம் தந்தாலும்கூட அதை நடைமுறைப்படுத்துவதில்லை. எனவே இதற்காக சட்டம் இயற்றப்பட வேண்டும்.

    தேசிய கல்விக் கொள்கையை எதிர்க்க வேண்டிய தமிழக அரசு கொஞ்சமும் மக்கள் நலனில் அக்கறை இல்லாமல் மத்திய அரசு எடுக்கிற எல்லாம் நிலைப்பாடுகளையும் கண்ணை மூடிக்கொண்டு ஆதரிக்கிறது.

    கல்வித்துறையும் அப்படித்தான் இருக்கிறது. இது மிகவும் ஆபத்தானது. மாணவர்களை பாதியிலேயே இடைநிற்றல் செய்யும் வகையில் இது ஒரு மறைமுகமான தாக்குதல்.

    தேசிய கல்வி கொள்கை என்பது இடைநிற்றல் சதவீதத்தை அதிகரிக்கும். 5-ம் வகுப்பு பொதுத் தேர்வு, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு, 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு, 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு என்பது மாணவரிடையே பாடச்சுமையை அதிகரித்து அவர்களை நசுக்குவதாகும்.

    அவர்களை பக்குவப்படுத்துவது, மேம்படுத்துவதற்கு என்று சொல்வதை விட கிராமப்புறங்களில் இருந்து கல்வி கற்க வரும் மாணவ-மாணவிகளை இடை நிற்றலுக்கு தள்ளி விடும்.

    மேற்கண்டவாறு அவர் கூறினார்.
    Next Story
    ×