search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொலை
    X
    கொலை

    விநாயகர் சிலை வைப்பதில் தகராறு- கல்லூரி மாணவர் கொலை

    சேலம் மாவட்டம் மல்லூர் அருகே விநாயகர் சிலை வைப்பது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் கல்லூரி மாணவர் ஓட ஓட விரட்டி குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    சேலம்:

    சேலம் மாவட்டம் மல்லூர் அருகே உள்ள நாழிக்கல்பட்டி காந்திநகரை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் திலீப்குமார் (வயது 20).

    இவர் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அரசு கலைக்கல்லூரியில் பி.ஏ. பொருளாதாரம் 3-ம் ஆண்டு படித்து வந்தார். அதே ஊரைச் சேர்ந்த கூலி தொழிலாளியான திருநாவுக்கரசு (25), ரவுடியாக வலம் வந்தார். திருநாவுக்கரசும், திலீப்குமாரும் கடந்த ஆண்டு வரை நண்பர்களாக இருந்தனர். பின்னர் அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர்.

    இந்தநிலையில் விநாயகர் சதுர்த்தியையொட்டி திலீப்குமார் தலைமையில் தனியாக ஒரு விநாயகர் சிலை வைத்தனர். இதே போல் திருநாவுக்கரசும் தனியாக அந்த பகுதியில் ஒரு சிலை வைத்தார். அப்போது அவர்களுக்குள் மீண்டும் மோதல் ஏற்பட்டது.

    மேலும் கடந்த 4-ந் தேதி சிலையை கரைக்க மேட்டூருக்கு சென்ற போது இரு தரப்பினருக்கும் இடையே மீண்டும் அங்கு வைத்து மோதல் ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த திருநாவுக்கரசு, திலீப்குமாரை கொலை செய்ய திட்டமிட்டார்.

    இந்த நிலையில் நேற்றிரவு திலீப்குமார் அவரது நண்பர் சரண் (18) என்பவருடன் வீட்டின் அருகில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த திருநாவுக்கரசு மற்றும் அவரது நண்பர் சரவணன் ஆகியோர் சமாதானம் பேசுவதாக கூறி அருகில் உள்ள ஒரு காலியிடத்திற்கு 2 பேரையும் அழைத்து சென்றார். அப்போது அவர்களிடையே மீண்டும் மோதல் ஏற்பட்டது.

    இதனால் ஆத்திரம் அடைந்த திருநாவுக்கரசு ‘‘என்னிடமே கை நீட்டி பேசும் அளவுக்கு நீ வந்து விட்டாயா?’’ என கேட்டதுடன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து திலீப்குமாரை சரமாரியாக கத்தியால் குத்தினார். அப்போது தப்பித்து ஓட முயன்ற திலீப்குமாரை, திருநாவுக்கரசும், சரவணனும் ஒட ஓட விரட்டி கத்தியால் குத்தினர். இதில் நிலைகுலைந்த திலீப்குமார் ரத்த வெள்ளத்தில் சாய்ந்தார். சரணையும் கத்தியால் குத்திய அவர்கள் தப்பியோடி விட்டனர்.

    வீட்டின் அருகிலேயே நடந்த இந்த சம்பவத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்த திலீப்குமாரின் தாய் மற்றும் அங்கிருந்தவர்கள் ஓடி வந்தனர். பின்னர் அவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே திலீப்குமார் பரிதாபமாக இறந்தார். சரணுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து வழக்குப்பதிவு செய்த மல்லூர் போலீசார் தப்பி ஓடிய 2 பேரையும் தேடி வருகின்றனர். கல்லூரி மாணவர் குத்தி கொல்லப்பட்ட சம்பவத்தால் அந்த பகுதியில் பதட்டம் ஏற்பட்டு உள்ளது. இதையொட்டி அந்த பகுதியில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
    Next Story
    ×