search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாராயணசாமி
    X
    நாராயணசாமி

    செப்டம்பர் மாதம் 390 போலீசார் நியமனம் - நாராயணசாமி தகவல்

    வருகிற செப்டம்பர் மாதம் 390 காவலர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

    புதுச்சேரி:

    புதுவை சட்டசபையில் கேள்விநேரத்தின்போது நடந்த விவாதம் வருமாறு:-

    சாமிநாதன் (பா.ஜனதா):- புதுவை வேலை வாய்ப்பகத்தில் எத்தனை பேர் பதிந்துள்ளனர். கடந்த 30 ஆண்டில் எத்தனைபேருக்கு வேலை வழங்கப்பட்டுள்ளது?

    அமைச்சர் கந்தசாமி:- புதுவை மாநிலத்தில் இதுநாள் வரை வேலைவாய்ப்பகத்தில் 2 லட்சத்து 12 ஆயிரத்து 191 பேர் பதிவு செய்துள்ளனர். புதுவை அரசு மற்றும் அரசு சார்பு நிறுவனங்களில் 6 ஆயிரத்து 395 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

    சாமிநாதன்:- வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவர்கள் 50 வயதை கடந்து அவரின் மகனும் பதிவு செய்து விட்டார். இன்னும் அவருக்கு வேலைவாய்ப்பு தரவில்லை. ஆனால் உங்கள் தேர்தல் அறிக்கையில் வீட்டிற்கு ஒருவருக்கு வேலை என அறிவித்தீர்கள்.

    கந்தசாமி:- பிரதமர் மோடி கூடத்தான் 2 கோடி பேருக்கு வேலை என அறிவித்தார். ஆனால், வேலை கொடுத்துவிட்டாரா?

    சாமிநாதன்:- தகவல் தொழில்நுட்ப பூங்கா தொடங்கப்படும் என அறிவித்தீர்கள். இதுவரை பூங்காவை தொடங்கவில்லை. இதை தொடங்கியிருந்தால் வேலை கிடைத்திருக்கும். அரசு மூலம்தான் வேலை கிடைக்க வேண்டும் என்றில்லை, தனியார் மூலம் வேலை கொடுக்கலாமே?

    கந்தசாமி:- மத்திய அரசு ரூ.500, ரூ.ஆயிரம் தடை செய்தது. ஜி.எஸ்.டி. வரி போட்டது. இதனால் பல தொழிற்சாலைகளை மூடிவிட்டனர். பல கோடி பேர் வேலையிழந்துள்ளனர்.

    சங்கர் (பா.ஜனதா):- 30 ஆண்டில் 6 ஆயிரம் பேருக்குத்தான் வேலை கொடுத்துள்ளீர்கள். இந்த கணக்கீட்டின்படி பார்த்தால் தற்போது பதிவு செய்துள்ள 2 லட்சம் பேருக்கு வேலை வழங்க 590 ஆண்டுகளாகும்.

    கந்தசாமி:- அப்படி பார்த்தால் மத்திய அரசு 2 கோடி பேருக்கு வேலை வழங்க 50 ஆயிரம் ஆண்டுகளாகும்.

    முதல்-அமைச்சர் நாராயணசாமி:- காவல் துறையில் பல்வேறு பணியிடங்களை நிரப்ப உள்ளோம். வருகிற செப்டம்பர் மாதம் 390 காவலர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.

    இதைத்தொடர்ந்து 800 பணியிடங்கள் நிரப்ப உள்ளோம். ஆசிரியர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட பணியிடங்களையும் நிரப்ப உள்ளோம்.

    இவ்வாறு விவாதம் நடந்தது.

    Next Story
    ×