search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குளச்சல் கடற்கரை சாலையில் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் சோதனையில் ஈடுபட்ட காட்சி.
    X
    குளச்சல் கடற்கரை சாலையில் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் சோதனையில் ஈடுபட்ட காட்சி.

    பயங்கரவாதிகள் ஊடுருவல் எச்சரிக்கை- குமரியில் போலீசார் விடிய, விடிய சோதனை

    தமிழகத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவி இருப்பதால் குமரி மாவட்டம் முழுவதும் நேற்று இரவு போலீசார் விடிய, விடிய வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
    குளச்சல்:

    தமிழகத்தில் 6 பயங்கரவாதிகள் ஊடுருவி இருப்பதாகவும், அவர்கள் நாசவேலைக்கு திட்டமிட்டு இருப்பதாகவும் உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இதன் காரணமாக தமிழகம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டு உள்ளனர். கடற்கரை மாவட்டமான கன்னியாகுமரி மாவட்டத்தில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

    மாவட்டம் முழுவதும் போலீசார் ரோந்து சுற்றி வந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கன்னியாகுமரி, நாகர்கோவில் பகுதிகளில் உள்ள லாட்ஜ், ஓட்டல்களில் சோதனை நடத்தி வருகிறார்கள். லாட்ஜ்களில் சந்தேக நபர்கள் யாராவது தங்கியிருக்கிறார்களா? என இந்த சோதனை நடக்கிறது. மேலும் சந்தேக நபர்கள் யாராவது வந்தால் தங்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என ஓட்டல் ஊழியர்களுக்கு போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

    சுற்றுலாதலமான கன்னியாகுமரியில் உள்ள பகவதி அம்மன் கோவிலில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. அங்கு வரும் பக்தர்கள் மெட்டல் டிடெக்டர் சோதனைக்கு பிறகே கோவிலுக்குள் அனுமதிக்கப்படுகிறார்கள். இதேபோல கடல் நடுவே அமைந்துள்ள திருவள்ளுவர் சிலைக்கும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

    குமரி மாவட்டம் முழுவதும் நேற்று இரவு போலீசார் விடிய, விடிய வாகன சோதனையில் ஈடுபட்டனர். ஆரல்வாய்மொழி, களியக்காவிளை, அஞ்சுகிராமம், கன்னியாகுமரியில் உள்ள சோதனைச்சாவடிகளுக்கு வந்த அனைத்து வாகனங்களையும் போலீசார் மறித்து சோதனையில் ஈடுபட்டனர். ஆனால் சந்தேக நபர்கள் யாரும் சிக்கவில்லை. அதேசமயம் குடிபோதையில் வாகனம் ஓட்டுதல், ஹெல்மட் அணியாமல் வருதல் என போக்குவரத்து விதிகளை மீறி வந்த 869 பேர் சிக்கினர். அவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அபராதம் விதித்தனர்.

    இரணியலில் போலீசார் வாகன சோதனை நடத்தியபோது ஆட்டோவில் வந்த 2 பேர் நிற்காமல் வேகமாகச் சென்றனர். அவர்களை போலீசார் பிடித்து விசாரித்து வருகிறார்கள். அவர்கள் எதற்காக ஆட்டோவை நிறுத்தாமல் சென்றனர், அவர்கள் குற்றவழக்குகளில் தொடர்புடையவர்களா? என்பது பற்றி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    நாகர்கோவில், கன்னியாகுமரி உள்ளிட்ட ரெயில்நிலையங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. இங்கிருந்து புறப்படும் அனைத்து ரெயில்களிலும் மெட்டல் டிடெக்டர் கொண்டு ரெயில்வே பாதுகாப்பு போலீசார் சோதனை நடத்தினர். பார்சல் பொருட்களை மோப்பநாய் உதவியுடன் சோதனை நடத்தினர்.

    கடலோர பாதுகாப்பு குழும போலீசார் இன்று 2-வது நாளாக கன்னியாகுமரி கடலில் ஆய்வு மேற்கொண்டனர். அதிநவீன படகில் சென்று அவர்கள் கடலில் சந்தேக நபர்கள் நடமாட்டம் உள்ளதா? என்பது பற்றி கண்காணித்தனர். மீனவர்களின் படகுகளையும் அவர்கள் சோதனைக்கு உட்படுத்தினர்.

    மேலும் அவர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் கடலோரம் உள்ள சோதனைச்சாவடிகளிலும் சோதனை நடத்தினர். சின்னமுட்டம், குளச்சல் பகுதியில் உள்ள சோதனைச் சாவடிகளில் இந்த சோதனை தீவிரமாக நடந்தது.
    Next Story
    ×