search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து
    X
    விபத்து

    கோவையில் விபத்து- சுவரில் கார் மோதி கல்லூரி மாணவர் பலி

    கோவையில் இன்று அதிகாலை கார் தடுப்பு சுவரில் மோதி கல்லூரி மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார். நண்பர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
    கோவை:

    கோவை பீளமேடு புதூர் பகுதியை சேர்ந்தவர் விஷ்ணு மதன். இவரது மகன் விஷ்ணு(வயது 19). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. 3-ம் ஆண்டு படித்து வருகிறார். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தை சேர்ந்தவர் மணிகண்டன்(18).

    இவர் கோவை கணபதியில் தங்கி பீளமேட்டில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வருகிறார். நண்பர்களான இவர்கள் 2 பேரும் இன்று அதிகாலை பீளமேட்டில் இருந்து காந்திபுரத்திற்கு டீ குடிக்க காரில் சென்றனர். அங்கு டீ குடித்து விட்டு பின்னர் பீளமேடு நோக்கி வந்து கொண்டிருந்தனர்.

    கார் பீளமேடு பகுதியில் உள்ள ஒரு தனியார் ஓட்டல் அருகே வந்தபோது கார் தனது கட்டுப்பாட்டை இழந்து ஓட்டல் மதில் சுவரில் மோதி சிக்கியது. இதில் விஷ்ணு உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மணிகண்டன் படுகாயத்துடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் இதுகுறித்து பீளமேடு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்து அவர்களை மீட்க முயன்றனர்.

    ஆனால் கார் சுவரில் சிக்கி கொண்டதால் மீட்க முடியவில்லை. இதையடுத்து பொக்லைன் எந்திரம் மூலம் காரை தனித்தனியாக பிரித்து எடுத்து விஷ்ணு உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர்.

    மேலும் காயம் அடைந்து உயிருக்கு போராடிய மணிகண்டனை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்த சம்பவம் குறித்து பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதிகாலையில் நடந்த இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    Next Story
    ×