search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழிசை சவுந்தரராஜன்
    X
    தமிழிசை சவுந்தரராஜன்

    ப.சிதம்பரத்துக்கு ஊழல் கட்சி தான் துணையாக இருக்கும் - தமிழிசை சவுந்தர்ராஜன்

    ப.சிதம்பரத்துக்கு ஊழல் கட்சி தான் துணையாக இருக்கும் என்று பா.ஜனதா மாநில தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் கூறினார்.
    தஞ்சாவூர்:

    தஞ்சையில் பா.ஜ.க தேர்தல் பொறுப்பாளர் பயிற்சி முகாமிற்கு இன்று காலை வந்திருந்த பா.ஜனதா மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பா.ஜனதா அரசு ஊழல் இல்லாத அரசு. இதனால் தான் தொடர்ந்து 2-வது முறையாக மக்கள் பா.ஜனதாவுக்கு ஆட்சி நடத்த வாய்ப்பு அளித்துள்ளனர்.

    முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை சி.பி.ஐ. அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். பா.ஜ.க யாரையும் திட்டமிட்டு கைது செய்ய வேண்டிய அவசியம் இல்லை. அவர் மீது தவறு இருப்பதால்தான் சி.பி.ஐ அதிகாரிகள் அவரை கைது செய்திருக்கிறார்கள். முதலில் ப.சிதம்பரம் மீது ஒரு வழக்கு என்றார்கள். தற்போது ஒன்றன் பின் ஒன்றாக ராணுவம், ஐ.என்.எக்ஸ். உள்ளிட்ட 4 வழக்குகளாகியுள்ளது.

    ப சிதம்பரம்

    இந்த வழக்குகளில் தொடர்புடைய இந்திரா முகர்ஜி அப்ரூவர் ஆனதால் தற்போது இந்த வழக்குகள் சூடுபிடிக்க தொடங்கி உள்ளன. சிதம்பரம் கைது நடவடிக்கையில் உள்நோக்கம் எதுவும் இல்லை. அவர் மீதுள்ள வழக்குகளை சட்டரீதியாக சந்திக்க வேண்டியதுதானே? அதை விட்டு விட்டு வாரண்ட் பிறப்பிக்கப்பட்டு 27 மணி நேரம் வீட்டைப் பூட்டிக் கொண்டு தலைமறைவாக இருந்து உள்ளார். தொடர்பு எல்லைக்கு அப்பாலும் இருந்துள்ளார்.

    இப்படி இருக்க சி.பி.ஐ அதிகாரிகள் சுவர் ஏறி குதித்து அவரை கைது செய்ய வேண்டிய சூழ்நிலையில் தள்ளப்பட்டனர். சி.பி.ஐ அதிகாரிகள் அவர்கள் கடமையை செய்தனர். தவறு யார் செய்தாலும் அவர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை உண்டு.

    விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைக்காததால் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. சிதம்பரம் அதிகாரப்பூர்வமாக தவறு செய்து இருக்கிறார். மக்கள் கொடுத்த வாய்ப்பை சொத்து சேமிப்பதற்காக பயன்படுத்தியிருக்கிறார். சிதம்பரத்திற்கு ஆதரவாக ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி பேசிவருகின்றனர். ஊழல்வாதிக்கு ஊழல் கட்சிதான் துணை இருக்கும். இன்று காலை விசாரணையில் தவறு செய்யவில்லை என்றால் சட்ட ரீதியாக நிரூபித்து வெளியே வரட்டும்.

    காஷ்மீர் பிரச்சினையை திசை திருப்புவதற்காக இந்த வழக்கு போடப்பட்டுள்ளது என்பது முற்றிலும் பொய். உச்சநீதிமன்ற நீதிபதியே சிதம்பரம் மீது உள்ள வழக்கின் தன்மை பற்றி பற்றி பேசினார். இதன் மூலம் தெரியவில்லையா அவர் மீது போடப்பட்ட வழக்கின் தன்மை பற்றி.

    காஷ்மீர் பிரச்சனைக்காக டெல்லியில் தி.மு.க நடத்தக்கூடிய ஆர்ப்பாட்டம் தேவையில்லாத ஆர்ப்பாட்டம். இதன் மூலம் தி.மு.க தனிமைப்படுத்தபடும். தொண்டர்களே இந்த போராட்டத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. இவர்களுக்கும் காஷ்மீருக்கும் என்ன தொடர்பு? இவர்கள் அறிவித்த போராட்டத்தை பாகிஸ்தான் ஊடகங்கள் பாராட்டுகிறது என்றால் இவர்களுக்கு என்ன தேசபக்தி இருக்கப் போகிறது? அங்குள்ள குடும்ப அரசியலை காப்பாற்றுவதற்காக இங்கு குடும்ப வாரிசுகளை வைத்துக் கொண்டு கட்சி நடத்தக் கூடிய தி.மு.க ஆர்ப்பாட்டம் நடத்துகிறது.

    காஷ்மீருக்கு தனி அந்தஸ்தை ரத்து செய்து 370-வது சட்டம் திரும்பப் பெற்றதன் மூலம் சிறுபான்மையாக உள்ளவர்களுக்கு இட ஒதுக்கீடு கிடைக்க வாய்ப்பாக இருக்கும். இதனை தடுக்க ஸ்டாலின் நினைக்கிறாரா? என சந்தேகிக்க தோன்றுகிறது. இதன் மூலம் தி.மு.க சமூக நல்லிணக்கத்திற்கு எதிரான கட்சி என்பதை உறுதி செய்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×