search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐகோர்ட் மதுரை கிளை
    X
    ஐகோர்ட் மதுரை கிளை

    இருப்பிட சான்றிதழ் முறைகேடு தொடர்பான வழக்கு - 126 மருத்துவ மாணவர்களுக்கு ஐகோர்ட்டு நோட்டீஸ்

    தமிழகத்தில் எம்பிபிஎஸ் படிப்பில் சேர்ந்த சில மாணவர்களின் இருப்பிட சான்றிதழ் முறைகேடு பற்றி தொடரப்பட்ட வழக்கில், பதில் அளிக்குமாறு 126 மருத்துவ மாணவர்களுக்கு மதுரை ஐகோர்ட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
    மதுரை:

    தமிழகத்தில் இந்த ஆண்டு எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். மருத்துவ படிப்புகளுக்கு மாணவர் களை சேர்ப்பதற்கான கலந்தாய்வு முடிவடைந்து, வகுப்புகள் தொடங்கி உள்ளன.

    இதற்கிடையே, மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கை தொடர்பாக மதுரையைச் சேர்ந்த சோம்நாத், நேயா, ஸ்ரீலயா உள்ளிட்ட சிலர் கடந்த ஜூலை 14-ந்தேதி மதுரை ஐகோர்ட்டில் தனித்தனியாக மனுக்கள் தாக்கல் செய்தனர்.

    அந்த மனுக்களில் அவர்கள் கூறி இருந்ததாவது:-

    தமிழகத்தில் 23 அரசு மருத்துவ கல்லூரிகள் உள்ளன. இதில் 85 சதவீத இடங்கள் தமிழக மாணவர்களுக்கும், 15 சதவீத இடங்கள் பிற மாநில மாணவர்களுக்கும் ஒதுக்கப்பட்டு உள்ளன. அரசு மருத்துவ கல்லூரிகளில் 2 ஆயிரத்து 744 இடங்கள் தமிழக மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டு உள்ளன.

    மேலும், தனியார் சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் 1,800 எம்.பி.பி.எஸ். இடங்கள் உள்ளன. இதில் மாநில இட ஒதுக்கீட்டின் கீழ் 977 இடங்களும், தனியார் மருத்துவ கல்லூரிகளின் நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் 562 இடங்களும் நிரப்பப்படுகின்றன.

    கடந்த மாதம் 6-ந்தேதி தமிழகத்தில் மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. 8-ந்தேதி எம்.பி.பி.எஸ். மாணவர்களுக் கான கலந்தாய்வு தொடங்கியது. 15-ந்தேதி தனியார் சுயநிதி மருத்துவ கல்லூரிகளுக்கான கலந்தாய்வு தொடங்கியது.

    இதில் தனியார் சுயநிதி மருத்துவ கல்லூரிகளின் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களை தமிழகத்தை பூர்வீகமாக கொண்டவர்களுக்கு வழங்க வேண்டும் என்ற வரைமுறை இல்லை.

    இதனால் நிர்வாக ஒதுக்கீட்டின்கீழ் வெளி மாநிலத்தவர்கள் அதிக அளவில் சேருகின்றனர். தமிழகத்தில் மருத்துவம் படித்துவிட்டு அவர்கள் வெளி மாநிலங்களுக்கு சென்று விடுவார்கள்.

    இதனால் தமிழகத்திற்கு எந்த பலனும் இல்லை. மேலும் இந்த ஆண்டு மாநில இடஒதுக்கீட்டின் கீழ் வெளிமாநில மாணவர்கள் ஏராளமானோர் கலந்தாய்வில் பங்கேற்று உள்ளனர்.

    எனவே தமிழக மருத்துவ கல்வி இயக்குனரகத்தின் செயலாளர் 2019-2020-ம் ஆண்டிற்கான மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு நடைபெற்ற கலந்தாய்வை ரத்துசெய்து அறிவிக்க வேண்டும்.

    தமிழக மருத்துவ கல்லூரிகளின் எம்.பி.பி.எஸ். மாணவர் சேர்க்கை கலந்தாய்வு பட்டியலில் வெளிமாநில மாணவர்களை நீக்கிவிட்டு, புதிதாக கலந்தாய்வு பட்டியலை வெளியிட்டு, அதன் அடிப்படையில் மருத்துவ கலந்தாய்வு நடத்த உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுக்களில் அவர்கள் கூறி இருந்தனர்.

    இந்த வழக்கு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, சுகாதாரத்துறை செயலாளரிடம் விளக்கம் பெற்று தெரிவிக்க அரசு வக்கீலுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது.

    இந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதி சுரேஷ்குமார் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

    அப்போது அரசு வக்கீல் ஆஜராகி, மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியலில் இடம்பெற்றவர்கள் தகுதியின் அடிப்படையில்தான் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர் என்று தெரிவித்தார்.

    இதைத்தொடர்ந்து மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல் வாதாடுகையில், “தமிழக மாணவர்களுக்கான ஒதுக்கீட்டில் பல்வேறு வெளிமாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களும் இடம் பெற்று உள்ளனர். இவர்கள் தமிழகத்தை பூர்வீகமாக கொண்டவர்கள் என்றும், சமீபத்தில் வெளிமாநிலங்களுக்கு சென்று தங்கி இருப்பதாகவும் கூறி உள்ளனர். இதை ஏற்க முடியாது. அவர்களுடைய இருப்பிடச் சான்றுகளை சரிபார்க்கவும், வெளிமாநிலங்களில் அவர்களின் இருப்பிட சான்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டால் மருத்துவ கலந்தாய்வில் இருந்து அவர்களின் பெயர்களை நீக்கவும் உத்தரவிட வேண்டும்” என்று கூறினார்.

    இதையடுத்து நீதிபதி, “வெளிமாநில மாணவர்கள் என்று கூறப்படும் 126 மாணவர்களை இந்த வழக்கில் எதிர்மனுதாரராக சேர்க்கிறேன்” என்று உத்தரவு பிறப்பித்தார்.

    மேலும், அந்த மாணவர்கள் எந்த அடிப்படையில் தமிழக இடஒதுக்கீட்டின் கீழ் கலந்தாய் வில் பங்கேற்றனர் என்பது குறித்தும், அவர்களின் இருப்பிட சான்று குறித்தும் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்பவும் நீதிபதி உத்தரவிட்டார்.

    பின்னர், வழக்கு விசாரணையை வருகிற 26-ந்தேதிக்கு ஒத்திவைத்தார்.

    Next Story
    ×