search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாண்டி
    X
    பாண்டி

    16 வயது சிறுமியை கடத்தி குடும்பம் நடத்திய வாலிபர் கைது

    அக்காள்-தங்கையை திருமணம் செய்த வாலிபர் 3-வது முறையாக 16 வயது சிறுமியை கடத்தி சென்று குடும்பம் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அந்த வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே உள்ள கரிச்சான்குண்டு பகுதியைச் சேர்ந்தவர் பாண்டி (வயது40). கூலி தொழிலாளியான இவர், சில ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியில் வசித்த தனது மாமன் மகள்களான தென்னரசி (32), அவரது தங்கை தாமரைச்செல்வி (30) ஆகிய இருவரையும் திருமணம் செய்து கொண்டார்.

    இதில் கரிச்சான்குண்டு கிராமத்தில் முதல் மனைவி தனது மகளுடனும், பனைக் குளத்தில் 2-வது மனைவி மகனுடனும் வசித்து வருகின்றனர்.

    கடந்த சில மாதங்களாக கரிச்சான்குண்டு கிராமத்தில் உள்ள முதல் மனைவி வீட்டில் தங்கினார். அந்த வீட்டின் எதிரில் பாண்டியின் அக்காள் தனது 3 மகள்களுடன் வசித்து வந்தார்.

    அப்போது பாண்டி அடிக்கடி அக்காள் வீட்டுக்கு சென்று வந்துள்ளார். அங்கு அக்காளின் 16 வயதுடைய மூத்த மகள் பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். அவரிடம் பேசி பழகி வந்தார்.

    மேலும் வாட்ஸ்-அப் மூலம் ஆசைவார்த்தை கூறி குறுந்தகவல்களை அனுப்பி உள்ளார். அதில், நாம் திருமணம் செய்து கொண்டு சேர்ந்து வாழலாம் என அந்த சிறுமியை அடிக்கடி வற்புறுத்தி வந்துள்ளார்.

    2 பெண்டாட்டிக்காரர் என தெரிந்தும் பாண்டி கூறிய வார்த்தைகளை அந்த சிறுமி நம்பி உள்ளார். இந்த நிலையில் கடந்த 31-ந்தேதி வீட்டில் இருந்த சிறுமி திடீரென மாயமானார். இதனால் பதட்டம் அடைந்த அவரது தாயார் மகளை பல்வேறு இடங்களில் தேடினார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் திருப்புல்லாணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

    அதே நேரத்தில் பாண்டியும் தனது முதல் மனைவியின் மகள், 2-வது மனைவியின் மகனுடன் மாயமாகி இருந்தார். இது முதல் மனைவிக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. அவரது உதவியின் மூலம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

    பாண்டியின் செல்போன் நம்பரை வைத்து ஆய்வு செய்ததில் அவர், தஞ்சாவூரில் ஒரு லாட்ஜில் தங்கி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு 16 வயது சிறுமி, மகன், மகளுடன் இருந்த பாண்டியை போலீசார் கைது செய்தனர்.

    மீட்கப்பட்ட சிறுமி அரசு காப்பகத்தில் சேர்க்கப்பட்டார். 2 குழந்தைகளும் அவர்களது தாயாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

    சம்பவத்தன்று பாண்டி 16 வயது சிறுமியை கடத்தி சென்றுள்ளார். தனது குழந்தைகளையும் அழைத்து சென்றுள்ளார். பழனிக்கு சென்ற அவர்கள் முருகன் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.

    பின்னர் தஞ்சாவூருக்கு சென்ற அவர்கள் அங்குள்ள லாட்ஜில் தங்கி குடும்பம் நடத்தினர். அப்போது பாண்டி திருச்சியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலைக்கு சென்று வந்துள்ளார்.

    குழந்தைகளுடன் சென்றால்தான் யாருக்கும் சந்தேகம் வராது. மேலும் தங்குவதற்கு வீடும் கிடைக்கும் என கருதி 2 குழந்தைகளையும் பாண்டி அழைத்து சென்றுள்ளது தெரியவந்துள்ளது. 16 வயதுடைய மைனர் பெண்ணை ஆசைவார்த்தை கூறி திருமணம் செய்து குடும்பம் நடத்திய பாண்டியை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

    Next Story
    ×