search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நடுக்கடலில் தேசியக் கொடி ஏற்றிய நீச்சல்வீரர்
    X
    நடுக்கடலில் தேசியக் கொடி ஏற்றிய நீச்சல்வீரர்

    உயிரினங்களை பாதுகாக்க விழிப்புணர்வு - நடுக்கடலில் தேசியக் கொடி ஏற்றிய நீச்சல்வீரர்

    உயிரினங்களை பாதுகாக்க விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் புதுவையில் நடுக்கடலில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து நீச்சல் வீரர் ஆச்சரியத்தில் ஆழ்த்தினர்.
    புதுச்சேரி:

    நாடு முழுவதும் நேற்று 73-வது சுதந்திர தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி அரசு அலுவலகங்கள், பள்ளிகளில் தேசியக்கொடி ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினார்கள். ஏற்கனவே இமயமலை சிகரம் உள்ளிட்ட உயரமான இடங்களில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து சாதனை படைத்துள்ளனர். அந்த வரிசையில் புதுவையில் நடுக்கடலில் நீச்சல் வீரர் ஒருவர் தேசியக்கொடியை ஏற்றி வைத்து ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். அதாவது, புதுவை கோலாஸ் நகரில் ஆழ்கடல் நீச்சல் பயிற்சி மையத்தை நடத்தி வருபவர் அரவிந்த். இவர் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆர்வலர்களுக்கு கடலில் நீச்சல் பயிற்சி அளித்து வருகிறார். இந்தநிலையில் சுதந்திர தினத்தை அரவிந்த் வித்தியாசமாக கொண்டாட முடிவு செய்தார். இதையொட்டி தனக்கு தெரிந்த நீச்சல் மூலம் நடுக்கடலில் தேசியக் கொடி ஏற்றி கொண்டாடுவது என முடிவு செய்தார்.

    அதன்படி புதுவையில் நேற்று காலை பாதுகாப்பு உடை அணிந்து அரவிந்த் உள்ளிட்ட நீச்சல்வீரர்கள் நீந்தியபடி தேசியக்கொடியுடன் கடலுக்குள் 5 கி.மீ. தூரம் சென்றனர். பின்னர் அங்கு நடுக்கடலில் 60 அடி ஆழத்தில் அரவிந்த் தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். இதை கடற்கரையில் இருந்து அவருடன் சென்று இருந்த மற்ற வீரர்கள் வீடியோவில் பதிவு செய்து கைதட்டி மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். இந்த காட்சிகளை அரவிந்த் சமூக வலைதளங்களில் பதிவு செய்தார். வைரலாக பரவிய இந்த காட்சி பரபரப்பை ஏற்படுத்தியது. ஏற்கனவே ஆழ்கடல் நீச்சல் பயிற்சியின்போது தன்னிடம் பயிற்சி பெற்றவர்களை திமிங்கல சுறாவின் அருகில் நீச்சல் அடிக்கச் செய்து அதை நீச்சல் பயிற்சியாளர் அரவிந்த் வீடியோவாக பதிவு செய்து சமூக வலை தளங்களில் பரவ விட்டது குறிப்பிடத்தக்கது.

    இந்த சாதனை குறித்து அரவிந்த் கூறுகையில், ‘சுகாதாரத்தை பேணி காக்க நிலத்தின் மேற்பரப்பினை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம். அதுபோல் கடல் வாழ் உயிரினங்களை அழிவில் இருந்து பாதுகாக்க வேண்டுமானால் கடலின் ஆழப்பகுதியையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டியது அவசியம். இதுகுறித்து மீனவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும், சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையிலும் நடுக்கடலில் தேசியக்கொடி ஏற்றி வைத்தோம்’ என்று தெரிவித்தார்.
    Next Story
    ×