search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மேட்டூர் அணை முழு கொள்ளளவை நெருங்கி வருவதால் 16 கண் பாலத்தை தொட்டபடி தண்ணீர் கிடக்கும் காட்சி.
    X
    மேட்டூர் அணை முழு கொள்ளளவை நெருங்கி வருவதால் 16 கண் பாலத்தை தொட்டபடி தண்ணீர் கிடக்கும் காட்சி.

    மேட்டூர் அணைக்கு நீர் வரத்து 50 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு

    மேட்டூர் அணைக்கு நேற்று இரவு சற்று அதிகரித்து 48 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்த நிலையில் இன்று நீர்வரத்து மேலும் அதிகரித்து 50 ஆயிரம் கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.
    மேட்டூர்:

    கர்நாடகா மற்றும் கேரளாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த பலத்த மழையால் கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் கடந்த வாரம் நிரம்பியது.

    இதனால் அந்த அணைகளில் இருந்து 3 லட்சம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டதால் கடந்த 12-ந் தேதி மேட்டூர் அணைக்கு 2 லட்சத்து 40 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது. மேட்டூர் அணை நீர்மட்டம் வேகமாக உயர்ந்தது.

    இதற்கிடையே கேரளா மற்றும் கர்நாடகாவில் மழை குறைந்துள்ளதால் கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து குறைந்ததால் இந்த அணைகளில் இருந்து நீர் திறப்பு படிப்படியாக குறைக்கப்பட்டது.

    இன்று காலை கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து 28 ஆயிரம் கன அடி தண்ணீரும், கபினி அணையில் 30 ஆயிரம் கன அடி தண்ணீரும் என மொத்தம் 58 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து நேற்று மதியம் 35 ஆயிரம் கன அடியாக சரிந்தது. நேற்று இரவு சற்று அதிகரித்து 48 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்த நிலையில் இன்று நீர்வரத்து மேலும் அதிகரித்து 50 ஆயிரம் கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.

    மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக காவிரி ஆற்றில் 10 ஆயிரம் கன அடி தண்ணீரும், கால்வாயில் 500 கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டுள்ளது. அணையில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீரைவிட அணைக்கு கூடுதல் தண்ணீர் வருவதால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

    நேற்று காலை 107.75 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று மேலும் உயர்ந்து 110.33 அடியானது. அணை வேகமாக நிரம்பி வந்த நிலையில் கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டு உள்ளதால் மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்ட மேலும் ஒரு வாரத்திற்கு மேல் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதற்கிடையே கேரளாவில் வயநாடு பகுதியில் மீண்டும் மழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி மழை பெய்து கர்நாடகாவில் உள்ள கபினி அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் அந்த அணையில் இருந்து காவிரியில் கூடுதல் தண்ணீர் திறக்கப்படும். அப்போது மேட்டூர் அணைக்கு நீர் வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
    Next Story
    ×