search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டப கட்டுமான பணிகளை அமைச்சர்கள் பார்வையிட்டனர்
    X
    டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டப கட்டுமான பணிகளை அமைச்சர்கள் பார்வையிட்டனர்

    திருச்செந்தூரில் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டப பணிகளை அமைச்சர்கள் ஆய்வு

    திருச்செந்தூரில் கட்டப்படும் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டப பணிகளை அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, சேவூர் ராமச்சந்திரன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
    திருச்செந்தூர்:

    பத்திரிகை, கல்வி, விளையாட்டு, ஆன்மிகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாருக்கு திருச்செந்தூரில் மணிமண்டபம் அமைக்கப்படும் என்று தூத்துக்குடியில் கடந்த 22-11-2017 அன்று நடந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

    அதன்படி, திருச்செந்தூர் வீரபாண்டியன்பட்டினத்தில் 60 சென்ட் நிலத்தில் ரூ.1 கோடியே 34 லட்சத்து 28 ஆயிரம் மதிப்பில் பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் முழு உருவ சிலையுடன் மணிமண்டபம் அமைக்கும் பணியை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 26-ந்தேதி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலிக்காட்சி மூலம் அடிக்கல் நாட்டி, தொடங்கி வைத்தார்.

    இந்த மணிமண்டபத்தில் பூங்கா, நூலகம் மற்றும் மணிமண்டபத்துக்கு வருகின்ற பொதுமக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டு வருகிறது.

    இந்த பணிகளை செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி ஆகியோர் நேற்று மதியம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர் அமைச்சர் கடம்பூர் ராஜூ நிருபர்களிடம் கூறியதாவது:-

    தென் மாவட்ட மக்களின் கோரிக்கையை ஏற்று, கொடை வள்ளல், சின்னய்யா என்று மக்களால் அன்போடு அழைக்கப்படும் பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாருக்கு திருச்செந்தூரில் மணிமண்டபம் அமைக்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். தொடர்ந்து அதற்கான அரசாணை வெளியிடப்பட்டு, நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணிகள் தொடங்கப்பட்டது. தற்போது மணிமண்டப கட்டுமான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

    மணிமண்டபத்தில் நிறுவப்பட உள்ள பா.சிவந்தி ஆதித்தனாரின் வெண்கல உருவ சிலையும் வடிவமைக்கப்பட்டு தயாராக உள்ளது. அதனை அவருடைய குடும்பத்தினரும் மற்றும் அனைவரும் பார்த்து, சரியாக இருப்பதாக ஒப்புதல் அளித்துள்ளனர். விரைவில் அந்த சிலை இங்கு நிறுவப்பட உள்ளது. மணிமண்டப இறுதிக்கட்ட பணிகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

    மணி மண்டப பணிகள் விரைவில் நிறைவு செய்யப்படும். இந்த மணிமண்டபத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் வந்து திறந்து வைக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    இதனை முதல்-அமைச்சரின் கவனத்துக்கு எடுத்து சென்று, பா.சிவந்தி ஆதித்தனாரின் மணிமண்டபத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் வந்து திறந்து வைக்க ஏற்பாடு செய்யப்படும்.

    இவ்வாறு அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.
    Next Story
    ×