search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கமல்ஹாசன்
    X
    கமல்ஹாசன்

    தமிழகத்தில் மக்கள் நீதி மய்யம் ஆட்சியை பிடிக்கும்- கமல்ஹாசன் அறிக்கை

    தமிழகத்தில் ஆட்சி அமைக்கின்ற வாய்ப்பினை பெருக்குவதற்குத் தேவையான அனைத்து வழிமுறைகளையும் மேற்கொண்டு வருவதாக மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    மக்கள் நீதி மய்யம் கட்சி கடந்த ஒராண்டிற்கும் மேலாக மாற்றத்தினை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது.

    பாராளுமன்ற தேர்தலில் மிகப்பெரும் நம்பிக்கையுடன் நமது கட்சிக்கு மக்கள் வாக்குகளை அளித்தனர்.

    அதற்கு ஏற்ற வகையில் மிகவும் பொறுப்பாகவும், அதே சமயத்தில் ஒரு வலுவான அரசியல் இயக்கமாகவும் தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு புதிய எழுச்சியோடு, தமிழக மக்களின் உண்மையான ஆதரவுடன் நமது கட்சி செயலாற்றி வருகின்றது.

    வருகிற சட்டமன்றத் தேர்தலில் நமது ஒற்றைக் கொள்கையான மக்கள் நலனை நடைமுறைக்கு கொண்டு வந்து ஆட்சி அமைக்கின்ற வாய்ப்பினை பெருக்குவதற்குத் தேவையான அனைத்து வழிமுறைகளையும் மேற்கொண்டு வருகிறோம்.

    அதன் முதல் கட்டமாக கட்சியை மேலும் வலுப்படுத்தும் வகையில் கட்சி கட்டமைப்பினை விரிவாக்கம் செய்திட நாம் முடிவெடுத்துள்ளோம்.

    கட்சியின் புதிய “கட்டமைப்பு விளக்கக் கூட்டம்” வருகிற 14, 15, 16 ஆகிய தேதிகளில் மதுரை மண்டலத்திற்குபட்ட மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், தேனி, சிவகங்கை ஆகிய மாவட்டங்களிலும், திருநெல்வேலி மண்டலத்திற்குட்பட்ட விருதுநகர் மாவட்டத்திலும் நடைபெற உள்ளது.

    இக்கூட்டத்தில் துணைத் தலைவர் மகேந்திரன், பொதுச்செயலாளர் அருணாசலம், பொருளாளர் சந்திர சேகர் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.

    அந்த கூட்டம் “2021 நமக்கான ஆட்சி” என்கின்ற நமது உயரிய நோக்கத்தினை நோக்கிய முக்கிய நகர்வாகும்.

    மேற்குறிப்பிடப்பட்டுள்ள மாவட்டங்களுக்கு உட்பட்ட மக்கள் நீதி மய்யம் கட்சியைச் சேர்ந்த அனைத்து பொறுப்பாளர்களும், தொகுதி, பகுதி, கள பொறுப்பாளர்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் என அனைவரும் தவறாமல் இதில் கலந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன். நாளை நமதே எனச் சொல்வோம். நாமே வெல்வோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×