search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சுருளி அருவியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்.
    X
    சுருளி அருவியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்.

    முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 2 அடி உயர்வு

    நீர்பிடிப்பு பகுதியில் கனமழை தொடருவதால் முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் ஒரே நாளில் 2 அடி உயர்ந்துள்ளது.
    கூடலூர்:

    கேரள, கர்நாடக மாநிலங்களில் கனமழை பெய்து வருவதால் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டு பெரும்பாலான மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் பெய்து வரும் மழையால் நீர் நிலைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.

    முல்லைப்பெரியாறு அணை நீர்பிடிப்பு பகுதியிலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்து 1428 கன அடியில் இருந்து 4318 கன அடியாக உயர்ந்துள்ளது.

    நேற்று காலை 114 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் இன்று காலை 6 மணி நிலவரப்படி 116 அடியாக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக நீர்திறப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது. நேற்று வரை 300 கன அடி நீர் தமிழக பகுதிக்கு திறந்து விடப்பட்டது. இன்று காலை அது 600 கன அடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

    வைகை அணையின் நீர்மட்டமும் கணிசமாக உயர்ந்து 31.27 அடியாக உள்ளது. அணைக்கு 214 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து மதுரை மாநகர குடிநீருக்காக 60 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 35.10 அடியாக உள்ளது. வரத்தும் திறப்பும் இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 75.76 அடியாக உள்ளது. 6 கன அடி நீர் வருகிற நிலையில் 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

    பெரியாறு 181.6, தேக்கடி 85, கூடலூர் 23, சண்முகாநதி அணை 17, உத்தமபாளையம் 5, வீரபாண்டி 4, வைகை அணை 3, சோத்துப்பாறை 1, கொடைக்கானல் 10.6 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. நீண்ட நாட்களுக்கு பிறகு திண்டுக்கல், தேனி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இன்று காலையும் சாரல் மழை தொடர்ந்து பெய்து வருகிறது.

    நீர்மட்டம் உயராததால் முதல்போக நெல் சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்படவில்லை. தற்போது பெய்து வரும் மழையினால் பெரியாறு அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

    எனவே இந்த மழை தொடர்ந்து பெய்தால் மட்டுமே 2-ம் போக நெல்சாகுபடிக்காவது தண்ணீர் கிடைக்கும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

    மேற்கு தொடர்ச்சி மலை ஹைவேவிஸ் பகுதியிலும் தொடர்ந்து கனமழை பெய்து வருதால் வறண்டு கிடந்த சுருளி அருவிக்கு நீர்வரத்து தொடங்கி உள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் ஆனந்தமாக நீராடி மகிழ்ந்தனர்.
    Next Story
    ×