search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    கோயம்பேடு அருகே ரவுடி கொலையில் நண்பர்கள் 2 பேர் கைது

    கோயம்பேடு அருகே ரவுடி கொலையில் நண்பர்கள் 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போரூர்:

    திருவேற்காட்டைச் சேர்ந்தவர் ரஞ்சித்.(வயது23). ரவுடி. நேற்று முன்தினம் அவர் நெற்குன்றம் ஏ.வி.கே. நகரில் உள்ள அட்டைக் கம்பெனி அருகே தலையில் கல்லைப் போட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

    இதுகுறித்து கோயம்பேடு உதவி கமி‌ஷனர் ஜெயராமன், இன்ஸ்பெக்டர் மாதேஸ்வரன், சப் இன்ஸ்பெக்டர் பூபதிராஜ் ஆகியோர் தலைமையில் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் கொலை தொடர்பாக ரஞ்சித்தின் கூட்டாளிகளான நண்பர்கள் பாடிகுப்பம் பகுதியைச் சேர்ந்த மண்ட தினேஷ் என்கிற ஜோசப், நெற்குன்றம் பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்த ஆகாஷ் என்கிற ஆனஸ்ட்ராஜ் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

    மேலும் இதில் தொடர்புடைய கூட்டாளிகள் 4 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர். ரஞ்சித்தை கொலை செய்தது ஏன்? என்பது குறித்து கைதான மண்ட தினேஷ், ஆகாஷ் ஆகியோர் போலீசாரிடம் கூறியதாவது:-

    நெற்குன்றம் ஏ.வி.கே. நகரில் வழக்கம் போல் ஒன்றாக அமர்ந்து மது அருந்தி கொண்டிருந்தோம். அப்போது யார் பெரிய ரவுடி என்பது குறித்து எங்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.

    அப்போது ரஞ்சித், ‘நான்தான் போலீசையே வெட்டியவன். எனவே நானே பெரிய ரவுடி. உங்கள் மீது என்ன பெரிய வழக்கு உள்ளது. நீங்கள் அனைவரும் மொக்கை’ என்று கூறினார்.

    இதனால் ஆத்திரமடைந்த நாங்கள் ரஞ்சித்தை கொலை செய்ய முடிவு செய்தோம். அவனுக்கு அளவுக்கு அதிகமாக மது ஊற்றிக் கொடுத்து பீர் பாட்டிலால் தலையில் சரமாரியாக அடித்தோம். பின்னர் அருகில் கிடந்த பெரிய கல்லை தலையில் போட்டு ரஞ்சித்தை கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றோம்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

    கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? கூட்டாளிகள் யார் - யார் என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

    Next Story
    ×