search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மர்மமான முறையில் இறந்த மாணவி சினேகா.
    X
    மர்மமான முறையில் இறந்த மாணவி சினேகா.

    மணப்பாறை அருகே பள்ளி மாணவி அடித்துக்கொலை?- தந்தையிடம் போலீசார் விசாரணை

    திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே பள்ளி மாணவி அடித்துக் கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து தந்தையிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மணப்பாறை:

    திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த நடுக்காட்டுப்பட்டியை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 38), கூலித்தொழிலாளி. இவரது மகள் சினேகா (16). இவர் அங்குள்ள பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.

    செல்வராஜூக்கு குடிப்பழக்கம் இருந்து வந்தது. தினமும் குடித்து விட்டு வந்து மனைவியுடன் தகராறு செய்து வந்தார். நேற்று முன் தினமும் தகராறில் ஈடுபட்டார். அப்போது மனைவியை செல்வராஜ் தாக்கியுள்ளார்.

    இதையடுத்து சினேகா, தந்தையிடம், அம்மாவை ஏன் அடிக்கிறீர்கள்? என தட்டிக்கேட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த செல்வராஜ், மகள் என்றும் பாராமல் சினேகாவை மண்வெட்டியால் தாக்கியதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சினேகா வீட்டிற்குள் தூக்குப் போட்ட நிலையில் பிணமாக தொங்கினார். வெளியில் சென்றிருந்த தாய் மீண்டும் வந்து பார்த்தபோது மகள் தூக்கில் பிணமாக தொங்குவதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். மகளின் உடலை பார்த்து கதறினார்.

    இது குறித்து தகவல் அறிந்த மணப்பாறை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை பார்வையிட்டனர். பின்னர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து சினேகாவின் சாவுக்கான காரணம் என்னவென்று விசாரணை நடத்தி வருகின்றனர். தந்தை குடித்து விட்டு தகராறு செய்ததால் மனமுடைந்து சினேகா தூக்குப்போட்டு தற்கொலை செய்தாரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் செல்வராஜ் மண் வெட்டியால் தாக்கியதில் சினேகா இறந்தாரா? என்றும், அதனை போலீசாரிடம் இருந்து மறைக்க செல்வராஜ், சினேகாவின் உடலை தூக்கில் தொங்க விட்டு தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடுகிறாரா? என்றும் பல்வேறு கோணங்களில் தந்தையிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தொடர்ந்து மாணவியின் சாவில் மர்மம் நீடித்து வருகிறது. எனவே பிரேத பரிசோதனை முடிவில் தான் சினேகா எப்படி இறந்தார் என்பதற்கான காரணம் தெரியவரும். பள்ளி மாணவி மர்மமான முறையில் இறந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    Next Story
    ×