search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முன்னாள் மேயர் உமா மகேசுவரி
    X
    முன்னாள் மேயர் உமா மகேசுவரி

    நெல்லையில் கொள்ளை கும்பல் தாக்குதல்: முன்னாள் பெண் மேயர் உள்பட 3 பேர் படுகொலை

    நெல்லையில் பட்டப்பகலில் வீடு புகுந்து கொள்ளை கும்பல் தாக்கியதில் தி.மு.க. முன்னாள் பெண் மேயர், அவரது கணவர் ஆகியோர் கொல்லப்பட்டனர். அவர்களுடன் இருந்த பணிப்பெண்ணும் பலியானார்.
    நெல்லை:

    நெல்லை மாநகராட்சியின் முதல் பெண் மேயர் உமா மகேசுவரி (வயது 62). இவர் தி.மு.க.வை சேர்ந்தவர். இவரது கணவர் முருகசங்கரன் (72). நெடுஞ்சாலைத்துறையில் பொறியாளராக பணியாற்றி ஓய்வுபெற்றவர்.

    இவர்களது வீடு பாளையங்கோட்டை ரோஸ் நகரில் உள்ளது. உமா மகேசுவரி தற்போது நெல்லை மாவட்ட தி.மு.க. மகளிர் அணி அமைப்பாளராக இருந்து வந்தார்.

    இவர்களது மகன் சரவணன் சில ஆண்டுகளுக்கு முன்பு விபத்தில் இறந்துவிட்டார். ஒரு மகள் கார்த்திகா நாகர்கோவில் ஆரல்வாய்மொழியில் உள்ள அறிஞர் அண்ணா கலைக்கல்லூரியில் பேராசிரியையாக பணியாற்றி வருகிறார். மற்றொரு மகள் பிரியா திருச்சியில் வசித்துவருகிறார்.

    உமா மகேசுவரியின் வீட்டில் மேலப்பாளையம் ஆசிரியர் காலனியை சேர்ந்த மாரி (37) என்பவர் பணிப்பெண்ணாக வேலை செய்து வந்தார். மாரி நேற்று காலை வழக்கம்போல் உமா மகேசுவரியின் வீட்டுக்கு வேலைக்கு வந்தார். அவர் தினமும் வேலையை முடித்துவிட்டு மதியம் வீட்டுக்கு சாப்பிட செல்வது வழக்கம்.

    ஆனால் நேற்று மதியம் வெகுநேரம் ஆகியும் அவர் வீட்டுக்கு திரும்பிவரவில்லை. இதனால் அவருடைய தாயார் வசந்தா தனது மகளை தேடி உமா மகேசுவரியின் வீட்டுக்கு வந்தார்.

     அப்போது அங்கு உமா மகேசுவரி, முருகசங்கரன், மாரி ஆகிய 3 பேரும் வெவ்வேறு அறைகளில் ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். முருகசங்கரன், உமா மகேசுவரி ஆகியோர் மார்பு மற்றும் முதுகில் கத்தியால் குத்தப்பட்டும், மாரி தலையில் இரும்பு கம்பியால் அடித்தும் கொல்லப்பட்டு கிடந்தனர்.

    இதுகுறித்து வசந்தா உடனடியாக உமா மகேசுவரியின் மகள் கார்த்திகாவுக்கு தகவல் தெரிவித்தார். அவர் வீட்டுக்கு விரைந்து வந்து தனது பெற்றோரின் உடல்களை பார்த்து கதறி அழுதார். பின்னர் அவர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

    நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் பாஸ்கரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். போலீசார் ஒவ்வொரு அறையாக சென்று, கொலை செய்யப்பட்டவர்களின் உடல்களை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். தகவல் அறிந்து உமா மகேசுவரியின் உறவினர்கள் சிலரும் அங்கு வந்தனர். அவர்கள் ஒவ்வொருவரிடமும் போலீஸ் கமிஷனர் விசாரணை நடத்தினார்.

    மோப்ப நாய் ‘பரணி’ சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டது. கொலை செய்யப்பட்ட 3 பேரின் உடல்களை மோப்பம் பிடித்துவிட்டு வீட்டில் இருந்து வெளியே சிறிது தூரம் சென்ற மோப்ப நாய் மீண்டும் வீட்டுக்குள் வந்து நின்றுவிட்டது. கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்தில் பதிந்திருந்த தடயங்களை பதிவு செய்தனர்.

    போலீசார் 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். வீட்டின் முன்பு ஏராளமான தி.மு.க.வினரும், பொதுமக்களும் திரண்டு நின்றனர்.

    விசாரணைக்கு பிறகு போலீஸ் கமிஷனர் பாஸ்கரன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கொலை செய்யப்பட்டவர்கள் அணிந்திருந்த கம்மல், வளையல், தங்க சங்கிலிகள் உள்ளிட்டவை கொள்ளையடிக்கப்பட்டு உள்ளன. மேலும் பீரோவில் இருந்த நகைகளும் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளன. வீட்டில் உள்ளவர்களிடம் தற்போது விசாரணை நடத்த முடியாததால் எத்தனை பவுன் நகைகள் கொள்ளைபோனது என்பது தெரியவில்லை.

    கொள்ளையர்களை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. கொலைகள் நடந்த வீட்டில் கண்காணிப்பு கேமரா இல்லை. இதனால் விசாரணையில் சற்று பின்னடைவு உள்ளது. முதற்கட்ட விசாரணையில் இது நகைகளுக்காக நடந்த கொலைகள் போலவே தெரிகிறது. குடும்ப பிரச்சினை காரணமாக கொலை நடந்ததா? என்பது குறித்தும் விசாரித்து வருகிறோம்.

    3 அல்லது 4 பேர் கொண்ட கும்பல் இந்த கொலைகளில் ஈடுபட்டு இருக்கலாம் என்று கருதுகிறோம். வீட்டின் பின்பக்க வாசலில் சில கைரேகைகள் கிடைத்துள்ளன. அவற்றின் அடிப்படையிலும் ஆய்வு செய்து வருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மேலப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, இந்த கொலை மற்றும் கொள்ளையில் ஈடுபட்டவர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

    நெல்லையில் பட்டப்பகலில் கொள்ளையர்கள் வீடு புகுந்து முன்னாள் பெண் மேயர், அவருடைய கணவர் உள்பட 3 பேரை படுகொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
    Next Story
    ×