search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராமதாஸ்
    X
    ராமதாஸ்

    விடுதலை போராட்ட வீரர் அர்த்தநாரீச வர்மாவுக்கு நினைவு மண்டபம் அமைக்க வேண்டும்- ராமதாஸ்

    விடுதலை போராட்ட வீரர் அர்த்தநாரீச வர்மாவுக்கு நினைவு மண்டபம் அமைக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    விடுதலைப் போராட்ட வீரரும், தமிழ்நாடு உழைப்பாளர் கட்சியின் நிறுவனருமான ராமசாமி படையாட்சியாரின் உருவப்படம் தமிழக சட்டப்பேரவை மண்டபத்தில் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

    பெருந்தலைவர் காமராசர் அமைச்சரவையில் உள்ளாட்சித் துறை அமைச்சராக பணியாற்றியதுடன், வன்னிய மக்களுக்கு இட ஒதுக்கீடு கோரி குரல் கொடுத்தவரான ராமசாமி படையாட்சியாருக்கு சட்டப் பேரவையில் உருவப் படம் திறந்திருப்பது மிகவும் பொருத்தமான அங்கீகாரம் ஆகும். அதற்கு முன்பாக அவரது பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படும்; கடலூரில் நினைவு மண்டபம் அமைக்கப்படும் என்று அறிவித்து அவற்றை செயல்படுத்தி வரும் தமிழக அரசு, இப்போது ராமசாமி படையாட்சியாரின் உருவப் படத்தையும் திறந்திருப்பது வரவேற்கத்தக்கதாகும். இதற்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு பா.ம.க. சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

    ராமசாமி படையாட்சியார், நடிகர் திலகம் சிவாஜி கணேசன், பெரும்பிடுகு முத்தரையர், சி.பா.ஆதித்தனார், கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை, இரட்டை மலை சீனிவாசன், ஏ.டி.பன்னீர் செல்வம், ஒண்டிவீரன், வீரன் சுந்தரலிங்கம், வீரன் அழகுமுத்துக் கோன், காலிங்க ராயன், ம.பொ.சிவஞானம் உள்ளிட்ட தலைவர்களுக்கு இந்த ஆட்சியில் சிறப்பு செய்யப்பட்டிருக்கிறது. இது மிகவும் பாராட்டத்தக்க தாகும்.

    இந்த வரிசையில் விடுதலைப்போராட்ட வீரரும், ராஜரிஷி என்று போற்றப்பட்டவருமான அர்த்தநாரீச வர்மாவுக்கு இடமளிக்கப்படாதது தான் மிகுந்த வருத்தமளிக்கிறது. சேலம் மாநகர எல்லைக்குட்பட்ட சுகவனபுரியில் 1874ஆம் ஆண்டு ஜூலை 27ஆம் தேதி பிறந்த அர்த்தநாரீச வர்மா அவர்கள், தனது வாழ்நாள் முழுவதும் கதராடை அணிவதையே கொள்கையாகக் கொண்டிருந்தார்.

    மகாகவி பாரதியாரின் சமகாலத்தவரான அர்த்த நாரீச வர்மாவின் கவிதைகள் பாரதியாரின் கவிதைகளுக்கு இணையான வீரியம் கொண்டவை. பல பத்திரிகைகளை தொடர்ந்து நடத்தி விடுதலை உணர்வை ஊட்டிய வர்மா ஏராளமான நூல்களையும் வெளியிட்டுள்ளார். அவரது கவிதைகள் விடுதலைப் போருக்கு உரமூட்டின.

    தமிழ்நாட்டில் மது விலக்குக்கு வித்திட்டதில் அர்த்தநாரீச வர்மாவின் பங்கு மகத்தானது. மது விலக்கை வலியுறுத்தி நாடு முழுவதும் சென்று பரப்புரை மேற்கொண்டார்.

    சேலத்தில் பிறந்து தமது வாழ்வின் இறுதிக்காலத்தை திருவண்ணாமலையில் கழித்த அர்த்தநாரீச வர்மா தமது 90-வது வயதில் 07.12.1964 அன்று காலமானார். அவரது சேவை இன்றுவரை அங்கீகரிக்கப்படவில்லை.

    அர்த்தநாரீச வர்மாவின் பணிகளுக்கும், சேவைகளுக்கும் உரிய அங்கீகாரம் வழங்காமல் இனியும் புறக்கணிக்கக் கூடாது. தமிழகத்திற்கு புகழ் சேர்த்த தலைவர்களை பெருமைப்படுத்தி வரும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு, ராஜரிஷி அர்த்தநாரீச வர்மா அவர்களின் பிறந்தநாளினை அரசு விழாவாக கொண்டாடுவதுடன், திருவண்ணாமலையில் அர்த்தநாரீச வர்மாவுக்கு மணிமண்டபமும், சேலத்தில் திருவுருவச் சிலையும் அமைக்க வேண்டும்.

    அர்த்தநாரீச வர்மா அவர்களின் வரலாறு மற்றும் பாடல்களை பாடநூல்களில் சேர்ப்பது; தமிழ் மொழியில் சிறந்த கவிஞர்களுக்கு அர்த்தநாரீச வர்மா பெயரில் விருது வழங்குவது உள்ளிட்ட நடவடிக்கைகளையும் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். மத்திய அரசும் அதன் பங்குக்கு விடுதலைப் போராட்ட வீரரை கவுர விக்கும் வகையில் சேலம் விமான நிலையத்துக்கு அர்த்தநாரீச வர்மா பெயரை சூட்டி, அவரது அஞ்சல் தலையை வெளியிட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    Next Story
    ×