search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை செய்த அனிதா, கணவர் ஜீவானந்தத்துடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட படம்.
    X
    தற்கொலை செய்த அனிதா, கணவர் ஜீவானந்தத்துடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட படம்.

    வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தற்கொலை - கல்லூரி உதவி பேராசிரியர் கைது

    கரூர் அருகே வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக கல்லூரி உதவி பேராசிரியரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கரூர்:

    கரூர் மாவட்டம், க.பரமத்தி ஒன்றியம் காட்டுமுன்னூர் அருகே உள்ள காளிபாளையத்தை சேர்ந்தவர் லட்சுமி (வயது 54). இவர், ஆதிரெட்டிபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவரது மகன் ஜீவானந்தம் (29), தென்னிலையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியாக பணியாற்றி வருகிறார். இவருக்கும், நெரூர் சின்னகாளிபாளையத்தை சேர்ந்த அனிதா(25) என்பவருக்கும் கடந்த ஆண்டு மே மாதம் திருமணம் நடந்தது.

    இந்தநிலையில் நேற்று முன்தினம் திடீரென அனிதா தூக்குப்போட்டு இறந்து விட்டதாக அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் ஜீவானந்தத்தின் வீட்டிற்கு சென்று அனிதாவின் உடலை பார்த்து கதறி துடித்தனர். இது குறித்து தகவல் அறிந்ததும் க.பரமத்தி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அனிதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதனிடையே அனிதாவின் உடலில் காயங்கள் இருப்பதாகவும், இது குறித்து உரிய விசாரணை மேற்கொண்டு அனிதாவின் சாவுக்கு காரணமானவர்களை கைது செய்ய வேண்டும் என்று கூறி, அனிதாவின் உறவினர்கள் க.பரமத்தி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் திருமணமான ஒரு வருடத்தில் அனிதா இறந்து விட்டதால், இதுபற்றி கரூர் வருவாய் கோட்டாட்சியர் சந்தியாவும் விசாரணை நடத்தினார்.

    மேலும் நேற்று அனிதாவின் பெற்றோர் உள்ளிட்டோர் கரூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு விசாரணைக்கு வந்திருந்தனர். அனிதாவின் கணவர் ஜீவானந்தம், அவரது தாய் லட்சுமி ஆகியோரும் விசாரணைக்காக அங்கு வந்தனர். அவர்களை பார்த்ததும் ஆத்திரமடைந்த அனிதாவின் உறவினர்கள் லட்சுமி, ஜீவானந்தம் அமர்ந்திருந்த கார் கண்ணாடியை உடைத்தனர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது.

    இதையறிந்ததும் கரூர் டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு கும்மராஜா தலைமையிலான போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். அப்போது அனிதாவின் உறவினர்கள் ஜீவானந்தம், லட்சுமி ஆகியோர் வரதட்சணை கொடுமைப்படுத்தி அனிதாவை கொன்று விட்டு, அவர் தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடுகின்றனர். எனவே அவர்களை கைது செய்ய வேண்டும் என்றனர். தொடர்ந்து அங்கு சாலை மறியலிலும் ஈடுபட முயன்றனர். போலீசார் சமாதானம் செய்ததோடு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததன்பேரில் மறியலை கைவிட்டனர்.

    இதனிடையே அனிதாவின் தாய் தமிழரசி அளித்த புகாரின் பேரில், தற்கொலைக்கு தூண்டியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து உதவி பேராசிரியர் ஜீவானந்தத்தை கைது செய்தனர்.

    Next Story
    ×