search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொலை
    X
    கொலை

    திருச்சியில் இன்று பட்டப்பகலில் பிரபல ரவுடி வெட்டிக்கொலை

    திருச்சி அருகே பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி 4 பேர் கொண்ட கும்பலால் இன்று மதியம் கொலை செய்யப்பட்டார்.

    திருச்சி:

    திருச்சியை அடுத்த திருவெறும்பூர் குமரேசபுரம் எழில்நகர் பகுதியை சேர்ந்தவர் ரஜினி என்ற கருப்பையா (வயது 35). இவர் மீது திருச்சி மாவட்டத்தில் உள்ள பல்வேறு போலீஸ் நிலையங்களில் ஏராளமான வழக்குகள் உள்ளன.

    ரவுடியான இவர் இன்று மதியம் 12 மணியளவில் வீட்டிற்கு அந்த பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். மேலகுமரேசபுரம் ரெயில்வே தண்டவாளம் அருகே ஆள் நடமாட்டம் குறைந்த பகுதியில் அவர் சென்று கொண்டிருந்தபோது 4 பேர் கொண்ட கும்பல் மோட்டார்சைக்கிளில் வந்தது.

    அவர்களை பார்த்ததும் கருப்பையா அங்கிருந்து ஓடி தப்ப முயன்றார். ஆனால் அந்த கும்பல் அவரை சுற்றி வளைத்தது. பின்னர் அவர்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டியது.

    இதில் கருப்பையாவின் கழுத்து, மார்பு, கை, வயிறு உள்ளிட்ட இடங்களில் பலத்த வெட்டுக்கள் விழுந்தது. பலத்த காயங்களுடன் துடி, துடித்த கருப்பையா சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் இறந்தார். பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பதட்டம் நிலவுகிறது.

    சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் திருவெறும்பூர் போலீசார் விரைந்து சென்றனர். கொலையுண்ட கருப்பையாவின் உடலை கைப்பற்றி திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். முன்விரோதத்தால் இந்த கொலை நடந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

    தப்பி ஓடிய கொலை கும்பலை போலீசார் தேடி வருகிறார்கள். கொலை நடந்த சம்பவமும், தப்பி ஓடியபோது கொலையாளிகளின் உருவங்களும் அருகிலுள்ள சி.சி. டி.வி. கேமிராக்களில் பதிவாகி இருப்பதாக கூறப்படுகிறது. அந்த சி.சி.டி.வி. கேமிரா வீடியோ பதிவு மூலம் குற்றவாளிகளை போலீசார் அடையாளம் கண்டு வருகிறார்கள். விரைவில் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று போலீசார் தெரிவித்தனர்.

    Next Story
    ×