search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காவேரிப்பட்டணம் அருகே இளம்பெண் மர்ம மரணம்- தந்தை போலீசில் புகார்
    X

    காவேரிப்பட்டணம் அருகே இளம்பெண் மர்ம மரணம்- தந்தை போலீசில் புகார்

    காவேரிப்பட்டணம் அருகே இளம்பெண் மர்மமான முறையில் இறந்தது குறித்து அவரது தந்தை போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    காவேரிப்பட்டணம்:

    தர்மபுரி மாவட்டம் கடத்தூர் அருகே உள்ள கடக்கார அள்ளி பகுதியைச் சேர்ந்தவர் முருகன் (வயது 46). கூலித்தொழிலாளி. இவருக்கு ஜெயபிரியா (22) என்ற மகள் உள்ளார்.

    இவருக்கும் கிருஷ்ணகிரி காவேரிபட்டணம்  பையூர் அடுத்த கோனார் கொட்டாயை சேர்ந்த சிலம்பரசன் என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. சிலம்பரசன் ஓசூரில் ஒரு தனியார் கம்பெனியில் மெக்கானிக்காக வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு ஒரு வயதில் பெண் குழந்தை உள்ளது.

    ஜெயபிரியா திருமணத்தின் போது 10 பவுன் நகை அணிந்து வந்தார். அதை சிலம்பரசன் குடும்பத்தினர் அடகு வைத்து விட்டனர். அந்த நகையை மீட்டு தரும்படி ஜெயபிரியாவின் பெற்றோர் அடிக்கடி கூறி வந்தனர். இதனால் இரு குடும்பத்தினரிடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. நேற்று மாலை 6 மணி அளவில் ஜெயபிரியா தனது தந்தையான முருகனுக்கு போன் செய்து தனது மாமியார் வீட்டில் நகைக்காக பிரச்சினை செய்கிறார்கள் என்று கூறி அழுததாக கூறப்படுகிறது. 

    அப்போது ஜெயபிரியாவின் மாமியார் தனது மகனுக்கு இன்னொரு திருமணம் செய்து வைப்பதாக கூறி சத்தம்போட்டுள்ளார். இதனை போனில் பேசிக் கொண்டிருந்த முருகனுக்கு கேட்டுள்ளது. உடனே அவர் தனது மகளை அமைதியாக இருக்குமாறு கூறி சமாதானப்படுத்தினர். இரவு 8.30 மணியளவில் ஜெயபிரியா இறந்து விட்டதாக  முருகனிடம் சிலம்பரசன் போனில் தகவல் தெரிவித்தார். தகவலறிந்த முருகன் உடனே தனது உறவினரை அழைத்துக் கொண்டு காவேரிப்பட்டணம் அரசு மருத்துவமனையில் வந்து பார்த்தபோது ஜெயபிரியா பிணமாக கிடந்தார். அவரது உடலை பார்த்து தந்தை முருகன் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.

    இதுகுறித்து முருகன் காவேரிப்பட்டணம் போலீஸ் நிலையத்தில் தனது மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் வழக்குபதிவு செய்து நகைக்காக ஜெயபிரியாவை அவரது கணவர் கழுத்தை நெறித்து கொன்றனரா? அல்லது அவரே தற்கொலை செய்து கொண்டாரா? என்ற பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமணமாகி 2 வருடங்கள் ஆன நிலையில்  ஜெயபிரியா மர்மமான முறையில் இறந்ததால் இது குறித்து கிருஷ்ணகிரி ஆர்.டி.ஓ. அவரது கணவர் மற்றும் உறவினர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×