search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கரூர் அருகே காதல் திருமணம் செய்த இளம்பெண் காரில் கடத்தல்
    X

    கரூர் அருகே காதல் திருமணம் செய்த இளம்பெண் காரில் கடத்தல்

    கரூர் அருகே காதல் திருமணம் செய்த இளம்பெண் காரில் கடத்தப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    கரூர்:

    கரூர் மாவட்டம் தோகைமலை அருகே உள்ள கருங்கல்பட்டி பகுதியை சேர்ந்தவர் சேகர். இவரது மகன் மணிவாசன்(வயது 22). கடவூர் அருகே உள்ள செம்பியாநத்தம் பகுதியை சேர்ந்தவர் வெள்ளைக் கண்ணு. இவரது மகள் ரம்யா(20).

    இவரும், மணிவாசனும் கரூரில் உள்ள தனியார் ஜவுளி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தனர். இதில் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. இந்த நிலையில் ரம்யாவுக்கு அவரது பெற்றோர் வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து திருமண ஏற்பாடு செய்தனர்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த ரம்யா வீட்டை விட்டு வெளியேறினார். பின்னர் ரம்யாவும், மணிவாசனும், தோகைமலை அருகே உள்ள மங்காம்பட்டியில் உள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். அதன் பின்னர் நேற்று இரவு அவர்கள் தோகைமலை போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர்.

    போலீசார் இரு தரப்பு பெற்றோர்களையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ரம்யா தன் காதல் கணவருடன் செல்வதாக உறுதிபட தெரிவித்தார். பின்னர் ரம்யா, மணிவாசன் மற்றும் மணிவாசனனின் தந்தை சேகர், தாயார் அமுதா ஆகியோர் ஒரு காரில் ஏறி வீட்டுக்கு புறப்பட்டு சென்றனர். அப்போது போலீஸ் நிலையம் அருகில் நின்றிருந்த மற்றொரு கார் அவர்களை பின்தொடர்ந்தது. சற்று தூரத்தில் மேட்டுப்பட்டி பாலம் அருகே காதல் ஜோடி சென்ற காரினை அந்த காரில் சென்றவர்கள் வழி மறித்தனர்.

    பின்னர் கண்இமைக்கும் நேரத்தில் மணிவாசன், அவரது தந்தை சேகர், அமுதா ஆகியோரை கம்பு, கட்டை போன்ற ஆயுதங்களால் தாக்கி விட்டு ரம்யாவை தாங்கள் வந்த காரில் கடத்தி சென்றனர்.

    படுகாயம் அடைந்த மணிவாசன், சேகர், அமுதா ஆகியோர் குளித்தலை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக தோகைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து ரம்யாவை காரில் கடத்தி சென்ற கும்பலை தேடி வருகின்றனர். கடத்தல் கும்பல் 2 கார்களில் போலீஸ் நிலையம் அருகிலேயே காத்து நின்றுள்ளனர். பின்னர் திருமண ஜோடி வெளியே வந்ததும் அவர்களை பின் தொடர்ந்து தாக்குதல் நடத்தி மணப்பெண்ணை கடத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    Next Story
    ×