search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருவேற்காடு நகராட்சி குடியிருப்புகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்க ரூ.3.11 கோடி ஒதுக்கீடு
    X

    திருவேற்காடு நகராட்சி குடியிருப்புகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்க ரூ.3.11 கோடி ஒதுக்கீடு

    திருவேற்காடு நகராட்சி குடியிருப்புகளுக்கு ரூபாய் 3 கோடியே 11 லட்சம் மதிப்பீட்டில் 9,000 குடியிருப்புகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்க முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகள் தற்போது நடைபெற உள்ளது.
    பூந்தமல்லி:

    திருவேற்காடு நகராட்சியில் 9 ஆயிரம் குடியிருப்புகளுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கும் பணிகள் நடைபெற உள்ளது.

    இதுகுறித்து நகராட்சி கமி‌ஷனர் சித்ரா கூறியதாவது:-

    திருவேற்காடு நகராட்சிக்குட்பட்ட 18 வார்டுகளில் இதுவரை தெரு குழாய் இணைப்புகள் மட்டுமே உள்ளது. முறையாக வீடுகளுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கப்படவில்லை. சிலர் சட்ட விரோதமாக வீடுகளுக்கு குடிநீர் இணைப்பை எடுத்து உள்ளனர்.

    இந்த நிலையில் நாளொன்றுக்கு 8.02 மில்லியன் லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. ஆனால் தற்போது 7.58 மில்லியன் லிட்டர் தண்ணீர் பொதுமக்களுக்கு கொடுக்கப்படுகிறது. இதனால் முறை இல்லாமல் குடிநீர் இணைப்பு பெற்றவர்கள் குடிநீர் இணைப்பை முறைப்படுத்திக் கொள்ள ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்காக ரூபாய் 3 கோடியே 11 லட்சம் மதிப்பீட்டில் 9,000 குடியிருப்புகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்க முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகள் தற்போது நடைபெற உள்ளது.

    இதற்காக குடிநீர் இணைப்பு தேவைபடுவோர் வரும் ஜூலை மாதம் முதல் நகராட்சியில் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். குடியிருப்புகளுக்கு ரூ.5 ஆயிரம், கம்பெனிகளுக்கு ரூ.10 ஆயிரம், தொழிற்சாலைகளுக்கு ரூ.15 ஆயிரம் முன்பணமாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

    தவணை முறையில் இந்த தொகையை செலுத்தலாம். மேலும் குடிநீர் இணைப்பு தேவை என்பவர்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொடுத்து முறையாகப் பெற்றுக்கொள்ளலாம். அனைத்து குடியிருப்புகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்ட பிறகு தெருக்களில் உள்ள குழாய்களின் இணைப்பு துண்டிக்கப்படும். மேலும் ஒரு வீட்டில் ஒரு நபருக்கு 85 லிட்டர் என்ற கணக்கில் குடிநீர் வழங்கப்பட உள்ளது. இந்த குழாயில் மீட்டர் பொருத்தப்பட உள்ளதால் குடிநீர் வீணாவதை தடுக்க முடியும் மோட்டார் மூலம் தண்ணீர் உறிஞ்சினால் அது தானாக நின்று விடும். விண்ணப்பங்களை ஜூலை முதல் வாரத்தில் இருந்து பொதுமக்கள் பெற்றுக்கொள்ளலாம். வரும் காலங்களில் சொத்துவரி, தொழில்வரி என அதனோடு சேர்த்து குடிநீர் கட்டணம் இணைந்து வரும். எனவே அனைவரும் குடிநீர் இணைப்பை கட்டாயம் பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும், இதன் பிறகு குடிநீர் இணைப்பு வழங்கப்பட மாட்டாது என தெரிவித்தார்.
    Next Story
    ×