search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தொலைக்காட்சிகளில் இந்தி திணிப்பு- வைகோ கண்டனம்
    X

    தொலைக்காட்சிகளில் இந்தி திணிப்பு- வைகோ கண்டனம்

    தொலைக்காட்சிகளில் இந்தி மொழியைத் திணிக்கும் உத்தரவை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று மத்திய அரசை ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.
    சென்னை:

    ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    பாராளுமன்றத் தேர்தலில் ‘மிருக பலத்துடன்’ வெற்றி பெற்று ஆட்சிப்பீடத்திற்கு வந்து விட்டதால் தாங்கள் நினைத்ததையெல்லாம் நிறைவேற்றி விட வேண்டும் என்று பா.ஜ.க. ஆட்சியாளர்கள் துடிக்கின்றனர்.

    இந்தித் திணிப்புக்கு எதிராக தமிழகம் மட்டுமின்றி தென்னக மாநிலங்கள் மற்றும் மேற்கு வங்காளம் உள்ளிட்டவை போர்க்கோலம் பூண்டு இருக்கின்ற நேரத்தில் மீண்டும் மீண்டும் பா.ஜ.க. அரசு இந்தி மொழியைத் திணிப்பதற்கான வேலையை மூர்க்கத்தனத்துடன் செய்து வருகிறது.

    மும்மொழிக் கொள்கையைக் கொண்டு வந்து இந்தியை விரும்பும் மாணவர்கள் கற்க ஏற்பாடு; ரெயில்வே துறையில் தகவல் பரிமாற்றத்தில் இந்தி, ஆங்கிலம் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்; தமிழ் மொழியில் அறவே உரையாடக் கூடாது என்று சுற்றறிக்கை.

    தற்போது மேலும் ஒரு கேடாக, தொலைக்காட்சிகள் ஒளிபரப்பும் நாடகம், திரைப்படம் உள்ளிட்டவற்றில் இடம் பெறும் காட்சிகளின் உரையாடல்கள் இந்தி மொழியில் வாக்கியங்களாக திரையில் இடம்பெற ஏற்பாடு செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. பா.ஜ.க. அரசின் இந்நடவடிக்கை கடும் கண்டனத்துக்கு உரியது.

    மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் இந்த தகவலை தெரிவித்து இருப்பதுடன், இந்திய மொழியான ‘இந்தி’யைத் தொலைக்காட்சிகள் அனைத்து மாநிலங்களிலும் பயன்படுத்த வேண்டும் என்றும் கூறி இருக்கிறார்.

    அரசியலமைப்புச் சட்டத்தில் 8-வது அட்டவணையில் உள்ள 22 மொழிகளுமே “இந்திய மொழிகள்” என்பதை முதலில் மத்திய அரசு ஏற்க வேண்டும். ‘இந்தி’ மட்டுமே இந்திய மொழியாக இருக்க வேண்டும் என்று கட்டாயமாக்குவது, அதிகாரத்தின் துணைகொண்டு திணிப்பது நாட்டின் பன்முகத் தன்மையைச் சீர்குலைக்குமே தவிர, இந்தி ஒருபோதும் ‘இந்தியா’வை ஒன்றிணைக்காது என்பதை பா.ஜ.க. அரசு புரிந்து கொள்ள வேண்டும். இல்லையேல் அதற்கான விலையைக் கொடுக்க வேண்டியது இருக்கும் என்பதைக் கவனப்படுத்துகிறேன்.

    தொலைக்காட்சிகளில் இந்தி மொழியைத் திணிக்கும் உத்தரவை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.
    Next Story
    ×