search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மரணம் அடைந்த எம்எல்ஏ ராதாமணி உடல் இன்று மாலை அடக்கம்
    X

    மரணம் அடைந்த எம்எல்ஏ ராதாமணி உடல் இன்று மாலை அடக்கம்

    நேற்று மரணம் அடைந்த விக்கிரவாண்டி தொகுதி எம்எல்ஏ ராதாமணி உடல் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு, அவரது சொந்த நிலத்தில் இன்று மாலை அடக்கம் செய்யப்படுகிறது.
    கண்டமங்கலம்:

    விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருந்தவர் ராதாமணி(வயது 69). இவர் கடந்த 1 ஆண்டு காலமாக புற்றுநோயால் அவதிப்பட்டு வந்தார்.

    இதைத்தொடர்ந்து அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் சிகிச்சை முடிந்து அவர் வீடு திரும்பினார். கடந்த சில மாதங்களாக அவர் அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் இருந்தார்.

    இந்தநிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு அவரது உடல்நிலை மோசமானது. இதைத்தொடர்ந்து எம்எல்ஏ ராதாமணி புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சூப்பர் பெஷாலிட்டி பிரிவில் அனுமதிக்கப்பட்டு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.

    இருப்பினும் நேற்று அதிகாலை 5 மணியளவில் எம்எல்ஏ ராதாமணி சிகிச்சை பலனளிக்காமல் இறந்தார்.

    இதுபற்றி தகவல் அறிந்ததும் விழுப்புரம் மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் பொன்முடி எம்.எல்.ஏ. ஆஸ்பத்திரிக்கு சென்று ராதாமணியின் உடலுக்கு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தி அவரது உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார்.

    எம்எல்ஏ ராதாமணி மரணம் அடைந்த தகவல் அறிந்ததும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து தனிவிமானத்தில் புதுச்சேரி சென்றார். பின்னர் அவர் கார் மூலம் ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு சென்று அங்கு எம்எல்ஏ ராதாமணியின் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

    பின்னர் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். மேலும் முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், எ.வ.வேலு, எம்.பி.க்கள் ராசா, துரை.ரவிக்குமார், எம்.எல்.ஏ.க்கள் செஞ்சி மஸ்தான், மாசிலாமணி மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

    நேற்று இரவு 7.30 மணியளவில்  எம்.எல்.ஏ. ராதாமணியின் உடல் ஆம்புலன்ஸ் வேன் மூலம் சொந்த ஊரான கண்டமங்கலம் அருகே உள்ள கலிஞ்சங்குப்பத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.

    இன்று காலை அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள்  எம்.எல்.ஏ. ராதாமணி உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

    இன்று மாலை 4 மணியளவில்  எம்.எல்.ஏ. ராதாமணியின் இறுதி சடங்கு நடக்கிறது. அதன் பின்பு அவரது உடல் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு அவரது சொந்த நிலத்தில் உள்ள ராமலிங்கம் சுவாமிகள் கோவில் அருகே உடல் அடக்கம் செய்யப்படுகிறது.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு  எம்.எல்.ஏ. ராதாமணி தனது உறவினர்களிடம் கூறும்போது, தான் இறந்தபிறகு என் உடலை ராமலிங்க சுவாமிகள் கோவில் அருகே அடக்கம் செய்யவேண்டும் என்று கூறியிருந்தார். அவரது விருப்பபடியே அங்கு இன்று மாலை  எம்.எல்.ஏ. ராதாமணியின் உடல் அடக்கம் செய்யப்படுகிறது.

    எம்.எல். ஏ. ராதாமணி மரணத்தையொட்டி விக்கிரவாண்டியில் இன்று மதியம் 1 மணிக்குமேல் கடைகள் அடைக்கப்படுகிறது.

    எம்.எல்.ஏ. ராதாமணி

    Next Story
    ×