search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நெல்லை டவுனில் சாலையில் தேங்கிய மழை நீரில் வாகனங்கள் சென்ற போது எடுத்த படம்.
    X
    நெல்லை டவுனில் சாலையில் தேங்கிய மழை நீரில் வாகனங்கள் சென்ற போது எடுத்த படம்.

    பாபநாசம் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 8 அடி உயர்வு

    நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் சாரல் மழை பெய்து வருவதால் பாபநாசம் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 8 அடி உயர்ந்து இன்று காலை 20.40 அடியாக உள்ளது.
    நெல்லை:

    தென்மேற்கு பருவ மழை தொடங்கியதை தொடர்ந்து கேரளா மற்றும் குமரி மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது. நெல்லை மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியிலும், நகர பகுதியிலும் நேற்று முதல் சாரல் மழை பெய்து வருகிறது. சில இடங்களில் கனமழையும் விட்டு விட்டு பெய்து வருகிறது.

    அதிகபட்சமாக அம்பையில் 23.4 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. கொடு முடியாறு அணை பகுதியில் 20 மில்லி மீட்டரும், கண்ணடியன் கால்வாய்-20, ராதாபுரம் -17, பாபநாசம்-15, நம்பியாறு -15, செங்கோட்டை, சேரன் மகாதேவி, குண்டாறு பகுதியில் தலா 12 மில்லி மீட்டர் மழையும் பெய்துள்ளது.

    அடவிநயினார்-10, களக்காடு-8.2, தென்காசி-7.3, மணிமுத்தாறு-6.8, கருப்பாநதி-6, ராமநதி-5, சேர்வலாறு-4, பாளை-3.4, நெல்லை-3, ஆய்க்குடி-3, நாங்குநேரி-2, சங்கரன் கோவில்-1 மில்லி மீட்டர் மழையும் இன்று காலை வரை பெய்துள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டியில் 5 மில்லி மீட்டரும், சாத்தான்குளத்தில் 1 மில்லி மீட்டர் மழையும் இன்று காலை வரை பெய்துள்ளது.

    மேலும் இன்று காலை தொடர்ந்து நெல்லை மாவட்டங்களிலும், தூத்துக்குடி பகுதியிலும் சாரல் மழை அவ்வப்போது பெய்து வருகிறது. நெல்லை, பாளை பகுதியிலும் விட்டு விட்டு சாரல் மழை பெய்கிறது. தென்காசி, குற்றாலத்திலும் இன்று சாரல் மழை பெய்கிறது.

    மழை காரணமாக பாபநாசம் அணைக்கு வினாடிக்கு 1153.70 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. இதனால் நேற்று 12.20 அடியாக இருந்த பாபநாசம் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 8 அடி உயர்ந்து இன்று காலை 20.40 அடியாக உள்ளது. மணிமுத்தாறு அணைக்கு வினாடிக்கு 275 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து குடிநீருக்காக வினாடிக்கு 275 கன அடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. அணையில் இன்றைய நீர்மட்டம் 57.75 அடியாக உள்ளது. சேர்வலாறு அணை நீர்மட்டம் 46.19 அடியாக உள்ளது. இதுபோல மற்ற அணைகளுக்கும் தண்ணீர் வரத்தொடங்கி உள்ளது.

    நெல்லை மாவட்டத்தில் சாரல் மழை பெய்து, அணைகளுக்கு தண்ணீர் வரத்தொடங்கியதால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    Next Story
    ×