search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொலையுண்ட சதீஷ்குமார்.
    X
    கொலையுண்ட சதீஷ்குமார்.

    சேலம் அம்மாப்பேட்டையில் டிரைவர் அடித்துக்கொலை

    சேலம் அம்மாப்பேட்டையில் மது குடிக்கும் தகராறில் டிரைவர் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சேலம்:

    சேலம் அம்மாப்பேட்டை எம்.ஜி.ஆர். நகர் பகுதியை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மகன் சதீஷ்குமார் (வயது 27).

    டிரைவரான இவர் நேற்றிரவு அம்மாப்பேட்டை ஆர்.டி.ஒ. அலுவலகம் அருகே மது அருந்தி கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த திலீபன் மற்றும் அவரது உறவினர்கள் 2 பேரும் அந்த பகுதியில் மது அருந்தினர்.

    அவர்களிடம் சதீஷ்குமார் மது கேட்டு தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றியதும் ஆத்திரம் அடைந்த திலீபன் உள்பட 3 பேர் சேர்ந்து சதீஷ் குமாரை சரமாரியாக தாக்கினார்.

    இதில் நிலை குலைந்த சதீஷ்குமார் மயங்கி விழுந்தார். இதை பார்த்த திலீபன் உள்பட 3 பேரும் தப்பியோடி விட்டனர். தகவல் அறிந்த உறவினர்கள் மற்றும் அம்மாப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

    பின்னர் சதீஷ்குமாரை மீட்டு அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு முதல் உதவி சிகிச்சைக்கு பின்னர் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வரும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து வழக்கு பதிவு செய்த அம்மாப்பேட்டை போலீசார் கொலையாளிகளை அவரது வீடுகளுக்கு சென்று தேடினர். அதற்குள் அவர்கள் தலைமறைவாகி விட்டனர். அவர்களை போலீசார் தொடர்ந்து தேடி வருகிறார்கள்.

    கொலை செய்யப்பட்ட சதீஷ்குமார் மும்பையில் டிரைவராக இருந்ததும், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஊருக்கு வந்த நிலையில் தற்போது கொலை செய்யப்பட்டதும் தெரிய வந்துள்ளது. சதீஷ்குமாருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. தற்போது இங்கு வேலை ஏதும் இல்லாமல் சுற்றி வந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் கொலையாளியை கைது செய்யக்கோரி சதீஷ்குமாரின் உறவினர்கள் இன்று காலை அம்மா பேட்டை ஆத்தூர் மெயின்ரோட்டில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி அறிந்ததும் அம்மாபேட்டை போலீசார் அங்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். இதையடுத்து உறவினர்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டனர். இதனால் சிறிதுநேரம் அம்மாபேட்டை பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    Next Story
    ×