search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாணவியை கொலை செய்தது எப்படி? என்பது குறித்து கைதான ராஜி,போலீஸ் சூப்பிரண்டு முன்பு நடித்து காட்டினார்.
    X
    மாணவியை கொலை செய்தது எப்படி? என்பது குறித்து கைதான ராஜி,போலீஸ் சூப்பிரண்டு முன்பு நடித்து காட்டினார்.

    கச்சிராயப்பாளையம் மாணவி கொலை- திருமணத்துக்கு வற்புறுத்தியதால் கொன்றதாக கைதான வாலிபர் வாக்குமூலம்

    கச்சிராயப்பாளையம் அருகே திருமணம் செய்ய வற்புறுத்தியதால் மாணவியை கிணற்றில் தள்ளி வாலிபர் கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    கச்சிராயப்பாளையம்:

    விழுப்புரம் மாவட்டம் கச்சிராயப்பாளையம் அருகே உள்ள மாதவச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் வேங்கமுத்து, கூலிதொழிலாளி. இவரது மகள் வீரம்மாள் (வயது 18).

    இவர் சின்னசேலம் அருகே உள்ள தனியார் கலைக்கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். மாதவச்சேரியில் அவரது பாட்டி வீடு உள்ளது. பாட்டி வீட்டுக்கு தினமும் மாலையில் சென்று வீரம்மாள் சாப்பாடு கொடுப்பது வழக்கம்.

    நேற்று முன்தினம் மாலையில் வீரம்மாள் பாட்டிக்கு சாப்பாடு கொண்டு சென்றார். இரவு வெகுநேரம் ஆகியும் வீரம்மாள் வீடு திரும்பவில்லை. இதனால் கவலையடைந்த பெற்றோர் பல இடங்களில் தேடினர். எங்கும் அவரை காணவில்லை.

    இந்த நிலையில் நேற்று காலை வீரம்மாள் அங்குள்ள கிணற்றில் பிணமாக மிதந்தார். இந்த விபரம் அவரது பெற்றோருக்கு தெரியவந்தது. அவர்கள் பிணத்தை பார்த்து கதறி அழுதனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் கள்ளக்குறிச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு ராமநாதன், கச்சிராயப்பாளையம் இன்ஸ்பெக்டர் வள்ளி மற்றும் போலீசார் விரைந்து சென்று கிணற்றில் பிணமாக கிடந்த வீரம்மாளின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.

    மாணவி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு யாராவது கொலை செய்து கிணற்றில் வீசினார்களா? என்று விசாரணை நடத்தினர். இந்த நிலையில் நேற்று இரவு போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், துணை போலீஸ் சூப்பிரண்டு ராமநாதன் ஆகியோர் அந்த பகுதியை சேர்ந்த சிலரிடம் விசாரணை நடத்தினர்.

    அப்போது அதே பகுதியை சேர்ந்த ராஜி (24) என்ற வாலிபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறினார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று துருவி துருவி விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர் மாணவி வீரம்மாளை கிணற்றில் தள்ளி கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். பின்பு ராஜியை போலீசார் மாணவி கொலை செய்யப்பட்ட கிணற்று பகுதிக்கு அழைத்து சென்றனர். அப்போது அவர் மாணவியை கிணற்றில் தள்ளி கொலை செய்தது எப்படி என்று நடித்து காட்டினார்.

    தொடர்ந்து போலீசார் ராஜியிடம் விசாரணை நடத்தினர். அப்போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. ராஜி வெளிநாட்டில் வேலைக்கு சென்றுவிட்டு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்தார். அப்போது வீரம்மாளுக்கும், ராஜிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. அது பின்பு காதலாக மாறியது. இருவரும் தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்தனர்.

    இந்த நிலையில் வீரம்மாள் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி காதலன் ராஜியிடம் தொடர்ந்து வற்புறுத்தி வந்தார். ஆனால் ராஜி அதை கண்டு கொள்ளாமல் இருந்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை வீரம்மாள் தனது பாட்டி வீட்டுக்கு சாப்பாடு கொண்டு சென்றார். சாப்பாடு கொடுத்து முடித்ததும் போன் மூலம் காதலன் ராஜியிடம் பேசினார். அப்போது அவர் காட்டுபகுதியில் உள்ள கிணற்றின் அருகே இருப்பதாக கூறினார்.

    இதை அறிந்த வீரம்மாள் அங்கு சென்றார். அப்போது அங்கு ராஜி மது அருந்தியிருந்தார். பின்பு அவர்கள் அங்கு சிறிதுநேரம் பேசிக்கொண்டிருந்தனர். அதன்பிறகு அங்குள்ள பாழடைந்த கட்டிடத்தில் உல்லாசமாக இருந்துள்ளனர். அப்போதும் வீரம்மாள் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி ராஜியிடம் கூறினார்.

    பின்பு வீரம்மாள் வீட்டுக்கு செல்ல முயன்றார். அப்போது தன்னை தொடர்ந்து திருமணம் செய்து கொள்ளும்படி வீரம்மாள் வற்புறுத்தியதால் அவரை கொலை செய்ய ராஜி முடிவு செய்தார். அதைத்தொடர்ந்து அவர் வீரம்மாளை கிணற்றின் அருகே அழைத்து சென்று திடீரென்று அவரை கிணற்றில் தள்ளிவிட்டார்.

    வீரம்மாளுக்கு நீச்சல் தெரியாததால் தண்ணீரில் மூழ்கி வீரம்மாள் பரிதாபமாக இறந்துவிட்டார். பின்பு ராஜி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

    மேற்கண்ட தகவல்கள் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து மாணவியை கிணற்றில் தள்ளி கொலை செய்த ராஜியை போலீசார் கைது செய்தனர்.

    திருமணம் செய்ய வற்புறுத்தியதால் மாணவியை கிணற்றில் தள்ளி வாலிபர் கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    Next Story
    ×