search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குமரி மேற்கு மாவட்டத்தின் மலையோர கிராமங்களில் கொட்டி தீர்த்த கோடை மழை
    X

    குமரி மேற்கு மாவட்டத்தின் மலையோர கிராமங்களில் கொட்டி தீர்த்த கோடை மழை

    குமரி மேற்கு மாவட்டத்தின் மலையோர கிராமங்களில் கொட்டி தீர்த்த கோடை மழை பெய்தது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கடந்த மாதம் முதல் வெயில் கொளுத்தியது.

    பாராளுமன்ற தேர்தல் சூட்டை மிஞ்சும் அளவுக்கு மாவட்டம் முழுவதும் வெயில் வாட்டி வதைத்தது. இதனால் பிரசாரத்தில் ஈடுபட்ட வேட்பாளர்களும், தொண்டர்களும் பெரும் அவதிக்கு ஆளானார்கள்.

    பகலில் வெளியே தலை காட்ட முடியாத அளவுக்கு மக்கள் வீடுகளில் முடங்கும் நிலை ஏற்பட்டது. இரவிலும் மாறாத புளுக்கத்தால் மக்கள் தூங்க முடியாமல் அவதிப்பட்டனர்.

    தேர்தல் பிரசாரம் நேற்று மாலை ஓய்ந்த நிலையில் கோடை வெயிலும் நேற்று பிற்பகல் முதல் திடீரென குறைந்தது. மாவட்டம் முழுவதும் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது.

    மாலை நெருங்கும் நேரத்தில் மாவட்டத்தின் மேற்கு பகுதிகளில் மழை பெய்ய தொடங்கியது. குறிப்பாக மலை கிராமங்களில் பலத்த மழை பெய்தது.

    சிற்றார், களியல், குலசேகரம்,குழித்துறை, திருவட்டார், சிவலோகம், பேச்சிப்பாறை, பெருஞ்சாணி பகுதிகளில் பெய்த மழை,பின்னர் குமரி கிழக்கு மாவட்ட பகுதிகளான மயிலாடி, கொட்டாரம், தக்கலை, இரணியல், குருந்தன்கோடு பகுதிகளிலும் பெய்தது.

    அதிக பட்சமாக குழித்துறையில் 54.4 மி.மீ. மழை பெய்தது. மற்ற இடங்களில் பெய்த மழை அளவு மி.மீட்டரில் வருமாறு:-

    பூதப்பாண்டி- 34.6, சிற்றார் 1- 35.4, களியல்- 6.2, கன்னிமார்- 42.4,பேச்சிப்பாறை- 53.2,பெருஞ்சாணி -53.4, புத்தன் அணை- 54, சிவலோகம் - 7, சுருளோடு- 30, தக்கலை- 1, குளச்சல்- 11.4,

    இரணியல்- 14.4, மாம்பழத்துறையாறு- 2, கோழிப்போர் விளை- 14, அடையாமடை- 11, முள்ளங்கினாவிளை- 4, ஆனைகிடங்கு - 6.2

    குமரி மாவட்டத்தில் பெய்த திடீர் கோடை மழை காரணமாக அணைகளுக்கு வரும் நீரின் அளவும் அதிகரித்தது. குறிப்பாக பேச்சிப்பாறை அணையின் நீர் மட்டம் இன்று காலை 8 மணி நிலவரப்படி 1.40 அடியாக உயர்ந்தது.

    பெருஞ்சாணி அணையின் நீர் மட்டம் 18.20 அடியாகவும், பொய்கை அணையின் நீர் மட்டம் 10.30 அடியாகவும் இருந்தது. சிற்றார் 1 அணையின் நீர் மட்டம் 5.18அடியாகவும், சிற்றார் 2 அணையின் நீர் மட்டம் 5.28 அடியாகவும் இருந்தது. மாம்பழத்துறையாறு அணையின் நீர் மட்டம் 43.64 அடியாக உள்ளது.

    கோடை மழை காரணமாக குமரி மாவட்டத்தில் நேற்றிரவு வெப்பத்தின் தாக்கம் சற்று குறைந்து காணப்பட்டது.

    Next Story
    ×