search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தந்தை சொத்து சேர்த்து வைக்காததால் சென்னையில் தெருவில் வசிக்கும் முன்னாள் எம்.பி. மகன்
    X

    தந்தை சொத்து சேர்த்து வைக்காததால் சென்னையில் தெருவில் வசிக்கும் முன்னாள் எம்.பி. மகன்

    சென்னையில் முன்னாள் எம்.பி. ஒருவரின் மகன் குடியிருக்க வீடு கூட இல்லாமல் தெருவில் வசிக்கும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளார்.
    சென்னை:

    எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் வாரிசு மட்டும் அல்ல சாதாரண வார்டு கவுன்சிலர் வாரிசுகள் கூட இன்று பல கோடி ரூபாய் சொத்துக்களுக்கு அதிபதிகளாக இருக்கிறார்கள்.

    பங்களா, சொகுசு கார் என ‘லக்சரி’ வாழ்க்கை அவர்களை தொற்றி கொள்கிறது.

    ஆனால் சென்னையில் முன்னாள் எம்.பி. ஒருவரின் மகன் குடியிருக்க வீடு கூட இல்லாமல் தெருவில் வசிக்கும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளார்.

    அந்த முன்னாள் எம்.பி.யின் பெயர் எஸ்.கே. சம்பந்தன். 1967-ல் திருத்தணி தொகுதி தி.மு.க. எம்.பி.யாக இருந்தவர். அதற்கு முன்பு காங்கிரசில் இருந்த அவர் எம்.எல்.சி. ஆகவும் இருந்துள்ளார்.

    இவருடைய மகன் பாலு (வயது65) என்பவர் தான் இந்த பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

    இவர் ஆதம்பாக்கம் பஸ் நிலையத்தில் வசித்து வருகிறார். அவரது சொத்தாக அழுக்கு படிந்த 2 கால் சட்டைகளும் ஒரு மேல் சட்டை ஆகியவை மட்டுமே உள்ளன.

    பசி எடுக்கும் போது அருகில் உள்ள அம்மா கேண்டீனில் சாப்பிட்டு கொள்கிறார்.

    இந்த பரிதாப நிலைக்கு ஆளானது எப்படி என்பது குறித்து அவரே விளக்கமாக தெரிவித்தார். அவர் கூறியதாவது:-

    நாங்கள் ஒரு காலத்தில் வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்தான். எங்களுக்கு குறிஞ்சிப்பாடியில் ரைஸ்மில் எல்லாம் இருந்தது.

    எனது தந்தை எம்.எல்.சி., எம்.பி. என பதவிகளில் இருந்தார். ஆனால் அரசியலில் எதுவும் சம்பாதிக்கவில்லை. தனது சொந்த பணத்தையும் கட்சிக்காக செலவிட்டார்.

    அவர் எம்.பி.யாக இருந்தபோது எத்தனையோ தொழில் அதிபர்கள் அவரை சந்திக்க வருவார்கள். அவர் நினைத்து இருந்தால் அதை வைத்து எவ்வளவோ சம்பாதித்து இருக்கலாம். ஆனால் லஞ்ச, ஊழல் அவருக்கு பிடிக்காது. எனவே சாதாரண வாழ்க்கைதான் வாழ்ந்தோம்.

    நான் எனது தந்தையுடன் பல தடவை டெல்லிக்கு சென்று இருக்கிறேன். எனது தந்தைக்கு கார் டிரைவராகவும் பணியாற்றினேன்.

    1971-ல் தி.மு.க. தலைவராக கருணாநிதி தேர்வு செய்யப்பட்டபோது அதை எனது தந்தை விரும்பவில்லை. அப்போது ஏற்பட்ட பிரச்சனையால் அவர் கட்சியில் இருந்து ஒதுங்கி இருந்தார். பின்னர் கட்சியில் இருந்தே விலகினார்.

    எம்.ஜி.ஆர். தி.மு.க.வில் இருந்து விலகி புதிய கட்சி தொடங்கியபோது எம்.ஜி.ஆரே எனது தந்தையை தனது கட்சிக்கு வரும்படி அழைத்தார். மந்திரி பதவி தருவதாகவும் கூறினார். ஆனால் எம்.ஜி.ஆருடன் செல்ல மறுத்து விட்டார்.

    இதன்பிறகு நாங்கள் பணக்கஷ்டத்துக்கு ஆளானோம். எங்களது ரைஸ்மில்லும் மூடப்பட்டது.

    பின்னர் நான் டிரைவர் தொழில் செய்து வாழ்ந்து வந்தேன். எனக்கும் குடும்பம் இருந்தது. என்னால் சிறப்பாக செயல்பட்டு பணம் சம்பாதிக்க முடியவில்லை.

    இந்த நிலையில் என்னை பக்கவாத நோய் தாக்கியது. அதனால் என்னால் தொழில் செய்ய முடியவில்லை.

    பணம் இல்லாததால் உறவினர்களும், குடும்பத்தினரும் என்னை கை விட்டு சென்று விட்டனர்.

    3 ஆண்டுகளாக ஆதரவற்றோர் இல்லம் ஒன்றில் வசித்து வந்தேன். அந்த இல்லத்தை வேறு இடத்துக்கு மாற்றினார்கள். நான் பக்கவாத நோயால் அவதிப்பட்டதால் என்னை புதிய இடத்துக்கு அழைத்து செல்ல மறுத்து விட்டனர்.

    அதில் இருந்து வேறு வழி இல்லாமல் தெருவில் வசித்து வருகிறேன்.

    பழைய நண்பர்கள் சிலர் அவ்வப்போது எனக்கு பணம் கொடுத்து உதவுகின்றனர். அதை வைத்து அம்மா கேண்டீனில் சாப்பிட்டு உயிர் வாழ்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×