search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    2009-ம் ஆண்டு தடியடி சம்பவத்தை கண்டித்து வக்கீல்கள் புறக்கணிப்பு போராட்டம்
    X

    2009-ம் ஆண்டு தடியடி சம்பவத்தை கண்டித்து வக்கீல்கள் புறக்கணிப்பு போராட்டம்

    2009-ம் ஆண்டு நடந்த தடியடி சம்பவத்தை கண்டித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று வக்கீல்கள் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    சென்னை:

    இலங்கையில் உள்நாட்டு போர் நடந்தபோது, தமிழர்கள் கொத்து கொத்தாக கொல்லப்பட்டனர். இதை கண்டித்து சென்னை ஐகோர்ட்டு வக்கீல்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது ஐகோர்ட்டுக்கு வந்திருந்த சுப்பிரமணியசாமி மீது வக்கீல்கள் சிலர் முட்டை வீசினர். இதுகுறித்து பதிவு செய்யப்பட்ட வழக்கில் வக்கீல்களை போலீசார் கைது செய்ய முயன்றபோது தள்ளுமுள்ளு ஏற்பட்டு, அது மிகப்பெரிய கலவரமாக வெடித்தது. இந்த சம்பவம் கடந்த 2009-ம் ஆண்டு பிப்ரவரி 19-ந்தேதி நடந்தது.

    அன்று போலீசார் நடத்திய தடியடி சம்பவத்தில் நீதிபதிகள், வக்கீல்கள், பொதுமக்கள் படுகாயமடைந்தனர். ஐகோர்ட்டு வளாகத்தில் உள்ள கோர்ட்டு அறைகள் அடித்து நொறுக்கப்பட்டன.

    குடும்பநல கோர்ட்டில் உள்ள டியூப் லைட் உள்பட ஏராளமான சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டன. வளாகத்தில் நின்று கொண்டிருந்த நீதிபதிகள், வக்கீல்கள் கார்கள் அடித்து உடைக்கப்பட்டன.

    இந்த தடியடி சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் வக்கீல்கள் பலர் படுகாயமடைந்தனர். நீதிபதிகள், வக்கீல்கள் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதலை கண்டித்து, ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 19-ந்தேதி கருப்பு தினமாக வக்கீல்கள் கடை பிடித்து வருகின்றனர்.

    இன்று அந்த கருப்பு தினம் கடைப்பிடிக்கப்பட்டது. ஐகோர்ட்டு வக்கீல்கள் சங்கத் தலைவர் ஜி.மோகன கிருஷ்ணன் தலைமையில் வக்கீல்கள் இன்று காலை ஒன்று கூடினர்.

    இந்த சங்கத்தின் துணை தலைவர் சுர்.சுதா, செயலாளர் கிருஷ்ணகுமார், பெண் வக்கீல்கள் சங்கத்தின் தலைவர் நளினி, செயலாளர் ஆதிலட்சுமி லோகமூர்த்தி உள்பட நூற்றுக்கணக்கான வக்கீல்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    போலீசாரை கண்டித்து ஐகோர்ட்டு வளாகம் முழுவதும் ஊர்வலமாக வக்கீல்கள் சென்றனர். பின்னர் ஐகோர்ட்டு முன்புள்ள என்.எஸ்.சி.போஸ் சாலையில், வக்கீல்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

    அப்போது தடியடி நடத்தியதற்கு காரணமான போலீஸ் அதிகாரிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் கோ‌ஷம் போட்டனர்.

    வக்கீல்கள் இன்று கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால், ஐகோர்ட்டு மற்றும் மாவட்ட கோர்ட்டுகளில் வக்கீல்கள் விசாரணைக்காக ஆஜராகவில்லை. இதனால், வழக்கு விசாரணை பெரிதும் பாதிக்கப்பட்டன.

    ஐகோர்ட்டு வளாகத்தில் 8 குடும்பநல கோர்ட்டுகள் உள்ளன. அதில், 5 கோர்ட்டுகளில் மட்டுமே நீதிபதிகள் உள்ளனர். இவர்கள் முன்பு வக்கீல் ஆர்.ஒய்.ஜார்ஜ் வில்லியம்ஸ் ஆஜராகி, ‘போராட்டத்தின் காரணமாக வக்கீல்கள் கோர்ட்டில் ஆஜராகாததால், வழக்காடிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படும் விதமான எதிர்மறைவான உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டாம்’ என்று கோரிக்கை விடுத்தார்.

    இதற்கு பதில் அளித்த நீதிபதிகள், ‘வக்கீல்கள் கஷ்டம் எங்களுக்கும் தெரியும். எதிர்மறையான உத்தரவுகள் எதையும் பிறப்பிக்க போவது இல்லை’ என்று பதில் அளித்தனர்.
    Next Story
    ×