search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குறுக்குச்சாலை அரசு மேல்நிலைப்பள்ளி முன்பு மாணவன் சந்தனகுமார் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டபோது எடுத்தபடம்.
    X
    குறுக்குச்சாலை அரசு மேல்நிலைப்பள்ளி முன்பு மாணவன் சந்தனகுமார் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டபோது எடுத்தபடம்.

    மூடப்பட்ட பள்ளிக்கூடத்தை திறக்கக்கோரி 8-ம் வகுப்பு மாணவன் உண்ணாவிரதம்

    ஆசிரியர்கள் வேலைநிறுத்தத்தால் மூடப்பட்ட அரசு பள்ளிக் கூடத்தை திறக்கக்கோரி 8-ம் வகுப்பு மாணவன் உண்ணாவிரத போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது.
    தூத்துக்குடி :

    தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள குறுக்குச்சாலையில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளிக்கூடத்தில் 550 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். அங்கு 28 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

    நேற்று முன்தினம் முதல் ஜாக்டோ-ஜியோ சார்பில் அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக குறுக்குச்சாலை அரசு மேல்நிலைப்பள்ளிக்கூடத்துக்கு ஆசிரியர்கள் யாரும் பணிக்கு வரவில்லை. இதனால் பள்ளிக்கூடம் நேற்று முன்தினம் முதல் மூடப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் அந்த பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வரும் குறுக்குச்சாலையை சேர்ந்த சந்திரனின் மகன் சந்தனகுமார்(வயது 13) நேற்று காலை பள்ளிக்கூடத்துக்கு வந்தான். ஆனால், பள்ளிக்கூடம் மூடப்பட்டு இருந்தது. இதனால் ஒரு அட்டையில், பள்ளிக்கூடத்தை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வாசகங்களை எழுதி கையில் பிடித்துக்கொண்டு பள்ளிக்கூட வாசலில் அமர்ந்து திடீரென உண்ணாவிரத போராட்டம் நடத்தினான்.

    இதுபற்றி அவன் கூறும்போது, ‘காமராஜர் திறந்த பள்ளிக்கூடத்தை மூடக்கூடாது. தமிழக அரசு மாணவர்களின் நலன் கருதி பள்ளிக் கூடத்தை உடனடியாக திறக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றான்.

    இதுகுறித்து தகவல் அறிந்த ஓட்டப்பிடாரம் தாசில்தார் காளிராஜ், போலீசார் பள்ளிக்கு சென்று மாணவனிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சமாதானம் அடைந்த அந்த மாணவன் உண்ணாவிரதத்தை கைவிட்டு அங்கிருந்து வீட்டுக்கு புறப்பட்டு சென்றான். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 
    Next Story
    ×